name='description'/> கடிநெல்வயல் வை.வேதரெத்தினம் வலைப்பூ !: May 2020

காலச்சுவடுகள் ! வாழ்க்கையில் நான் கடந்து வந்த பாதை பற்றிய வரலாறு !

விரும்பும் பதிவைத் தேடுக !

Sunday, May 10, 2020

காலச் சுவடுகள் (61) : 2019 நிகழ்வுகள் - கூண்டுக்கிளி !


தமிழ்ப் பணி மன்ற ஆட்சியர் திரு.வை.வேதரெத்தினம் அவர்கள் எழுதும் தன்வரலாறு (AUTOBIOGRAPHY) !

காலச் சுவடுகள் (61) : 2019 நிகழ்வுகள் !

                                                    கூண்டுக் கிளி !

--------------------------------------------------------------------------------------------

அன்பு என்னும் கூண்டுக்குள் அடைபட்டிருக்கும் அத்துணை உறவுகளுமே கூண்டுக் கிளிகள் தான் ! எல்லோருடைய வாழ்விலும் எல்லா உறவுகளுமே அமைந்து விடுவதில்லை. சிலருக்கு, தந்தை முகம் இன்னதென்று அறியாப் பருவத்திலேயே தந்தை மறைந்து போயிருப்பார் !

வேறு சிலருக்குத் தாயின் முகமே தெரியாது; அண்ணன் தம்பி இல்லாத ஒற்றை ஆடவனாகச் சிலர் இருப்பார்கள்என்னைப் போல ! தமக்கை, தங்கை இல்லாத ஆடவர்களும் உண்டு.  சில உறவுகள் இல்லாத போது, இருக்கும் உறவுகள் மீது அன்பு பெருகும்; இது உலக இயற்கை !

என்னுடன் கூடப் பிறந்த தமையனோ, தம்பியோ கிடையாது; ஒரு தமக்கை, மூன்று தங்கைகள் ! அண்ணன் தம்பி இல்லாததால், தமக்கை மீதும், தங்கைகள் மீதும் எனக்கு  அன்பு  அதிகம் ! தந்தையை இளம் அகவையிலேயே இழந்துவிட்ட என் தங்கைகள் மூவருக்கும் நான் தான் திருமணம் செய்து வைத்தேன் !

என் தங்கைகளில் முதலாமவர் திருமதி கல்யாணி இராமமூர்த்தி. ஆசிரியரான திரு.இராமமூர்த்திக்கு வாழ்க்கைப்பட்டு, திருத்துறைப் பூண்டி அருகில் உள்ள இடும்பவனம் என்னும்  ஊரில் வாழ்ந்து வந்தார். மூன்று பிள்ளைகள்; ஒருவர் ஆண்; மற்ற இருவரும் பெண்கள் ! அனைவருக்கும் திருமணமாகிக் குழந்தைகளுடன் வெவ்வேறு ஊர்களில் வாழ்ந்து வருகின்றனர் !

இந்த நிலையில் 2019 -ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 13 –ஆம் நாள் திருமதி. கல்யாணி, யாரும் எதிர்பாரா நிலையில் காலமானார். அவர் இறக்கும் போது அகவை 70 இருக்கலாம்; சரியாகத் தெரியவில்லை ! இருந்தாலும் அவருக்கு இத்துணை விரைவாக இறப்பு வந்திடும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. என் அன்புக் கூண்டுக்குள் அடைபட்டிருந்த கல்யாணி என்னும் கிளி என்னைவிட்டுப் பறந்து சென்றுவிட்டது ! அதனால் ஏற்பட்ட துன்பியல் உணர்வுகளைக் காலம் தான் துடைத்து  எறிய வேண்டும்துன்பியல் நிகழ்வுகள் நிறைந்த ஆண்டாக 2019 –ஆம் ஆண்டு எனக்கு மாறிப் போயிற்று !

திருமதி.கல்யாணியின் கணவர், அத்தான் திரு.இராமமூர்த்தி அவர்கள் ஏறத்தாழ 35 ஆண்டுகளுக்கு முன்னதாக ஒரு புத்தகத்திலிருந்து பிரிந்த ஏடுகளை என்னிடம்  கொடுத்தார். மொத்தம் 99 ஏடுகள் ! புத்தகம் என்னும் கட்டுமானத்தில் இருந்து விடுவித்துக் கொண்டு உதிர்ந்து போன ஏடுகளாகத் தான் அவை இருந்தன. புத்தகத்தின் பெயர் தெரியவில்லை !

அவரது தந்தையார் அதிகம் படிக்காதவர். வேளாண்மையில் ஈடுபட்டிருந்தவர். அவர் வைத்திருந்த புத்தகம் என்று சொல்லி, அத்தான் திரு.இராமமூர்த்தி அவர்கள் 99 ஏடுகளையும் என்னிடம் ஒப்படைத்தார். அந்த ஏடுகளின் பக்கங்கள் க, , ரு, , அ போன்ற தமிழ் எண்களில்  குறிப்பிடப்பட்டிருந்தன. பக்கங்களும் வரிசையாக இல்லாமல் சில காணாமற் போயிருந்தன !

அந்த ஏடுகளின் சில பக்கங்களைப் படம் எடுத்து, சென்னையில் உள்ள திருநெல்வேலி, தென்னிந்திய சைவ சித்தாந்த நூற் பதிப்புக் கழகத்திற்கு அனுப்பிஅந்தப் புத்தகத்தின் பெயர் என்ன என்பதைத் தெரிவிக்குமாறும், அந்தப் புத்தகம் போல் புதியதொன்று கிடைக்குமா என்றும், புதிய புத்தகத்தில் விலை என்ன என்றும் கேட்டு மடல் எழுதி இருந்தேன் !

அந்தப் புத்தகத்தின் பெயர்சூடாமணி நிகண்டுஎன்றும், அஃது அப்போது இருப்பில் இல்லை என்றும் தெரிவித்து எனக்கு மறுமொழி அனுப்பி இருந்தனர் ! நான் வியப்பில் ஆழ்ந்து போனேன் ! ஐந்தாம் வகுப்புக் கூடப் படிக்காத ஒரு வேளாண் குடிமகனான திரு.கந்தசாமியிடம்சூடாமணி நிகண்டா ?“ இக்காலத்தில் பெரிய புலவர்களிடம் கூட இல்லாதசூடாமணி நிகண்டுஎன்னும்  அகரமுதலி அவரிடம் எப்படி ?

அப்புறம் தான் எனக்கு ஒன்று புரிந்தது ! பள்ளிப் படிப்பு இருந்ததோ இல்லையோ, அக்கால மக்கள் நிரம்பவும் தமிழ் நூல்களைப் படித்திருக்கிறர்கள். அதனால் தான் அவர்களால் ஆயிரக் கணக்கான நாட்டுப்புறப் பாடல்களைப் புனைய முடிந்திருக்கிறது !

காமன் பண்டிகையின் போது எரிந்த கட்சி, எரியாத கட்சி என்று இரண்டு கட்சிகளாகப் பிரிந்து காமன் வரலாற்றைப் பாடல்களாக இசை கூட்டிப் பாட முடிந்திருக்கிறது. பெண்கள் தாலாட்டுப் பாடல்களையும், கும்மி, கோலாட்டப் பாடல்களையும், ஒப்பாரிப் பாடல்களையும் புனைந்து பாட முடிந்திருக்கிறது !

பள்ளிக்குச் செல்லாதவர்கள் பாடல் புனைந்தது அக்காலம்; தமிழில் பட்டம் பெற்றவர்கள் கூட நான்கு வரியில் ஒரு பாடல் எழுத முடியாமல் திணறுவது இக்காலம் ! நாம் தமிழ்க் கல்வியில் தான், நாண் சூடற்று எத்துணைப் படுகுழியில் வீழ்ச்சி அடைந்து கிடக்கிறோம் ! தாய்மொழியில் ஒரு பாடல் எழுதத் திறனற்றவர்கள் எல்லாம் தம்மைத்தமிழன்என்று சொல்லிக் கொள்வது எள்முனையளவு கூட மாண்புடைய செயலல்லவே !

எனக்குக் கிடைத்த 99 ஏடுகளையும், மிகுந்த இன்னற்பட்டு பக்க எண் ஏறு வரிசைப் படி அடுக்கி, புத்தகமாகத் தைத்து கட்டடம் (BOUND) செய்து வைத்திருக்கிறேன். அது தான் என் தமிழ் வேட்கைக்கு உணவளிக்கும் அமுதசுரபியாக இப்போது திகழ்ந்து வருகிறது !

இப்புத்தகத்தின் இடப்பக்கம் பாடலாகவும், அதற்கு நேர் வலப்பக்கம் பாடலுக்குப்  பொருள் சொல்லும் வகையிலும்  வகைப்படுத்தித் தரப்பட்டுள்ளது. இதிலிருந்து ஒரு பாடல் மட்டும் உங்கள் பார்வைக்காக :

பரிதிபாற் கரனா தித்தன்,
..........பனிப்பகை சுடர் பதங்கன்
இருள்வலி சவிதா சூரன்
..........எல்லு மார்த்தண்டன் என்றூழ்
அருணணா  தவனே  மித்திரன்,
..........ஆயிரஞ் சோதி  யுள்ளோன்
தரணிசெங்  கதிரோன்  சண்டன்
..........தபனனே  ஒளியே  சான்றோன்
அனலியே  பரியே  பானு
..........அலரியே அண்ட யோனி
கனலியே  விகர்த்த  னன்வெங்
..........கதிரவன்  பகலோன்  வெய்யோன்
தினகரன்  பகலே   சோதி
..........திவாகரன்  அரிய  மாவே
இனனுடன்  உதயன்  ஞாயிறு
..........எல்லையே  கிரண  மாலி
விரவுமேழ்  பரியோன்  வேந்தன்
..........விரிச்சிகன் விரோச  னன்பேர்
இரவிவிண்  மணிய  ருக்கன்
..........ஏழேழும்  சூரியன்  பேர்.

வலப்பக்கம் தரப்பட்டுள்ள பாடலின் பொருள்:- பரிதி, பாற்கரன், ஆதித்தன், பனிப்பகை, சுடர், பதங்கன், இருள்வலி, சவிதா, சூரன், எல், மார்த்தாண்டன், என்றூழ், அருணன், ஆதவன், மித்திரன், ஆயிரஞ் சோதியுள்ளோன், தரணி, செங்கதிரோன், சண்டன், தபனன், ஒளி, சான்றோன், அனலி, அரி, பானு, அலரி, அண்டயோனி, கனலி, விகர்த்தனன், கதிரவன், பகலோன், வெய்யோன், தினகரன், பகல், சோதி, திவாகரன், அரியமா, இனன், உதயன், ஞாயிறு, எல்லை, கிரணமாலி, ஏழ்பரியோன், வேந்தன், விரிச்சிகன், விரோசனன், இரவி, விண்மணி, அருக்கன் ஆகிய 49 சொற்களும் சூரியனைக் குறிப்பவை !

இவற்றுள் ஏறத்தாழ 28 சொற்கள் தமிழ். ஏனைய 21 சொற்களும் வடமொழியாக இருக்கலாம். தமிழில் ஆர்வமுள்ள ஒவ்வொருவரும் தம் கையில்சூடாமணி நிகண்டுவைத்திருந்தால், அவரைவிடப் புலவர் வேறு யார் இருக்க முடியும் ?


--------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
(kadikaivedarethinam@gmail.com)
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.பி: 2051, ஆடவை (ஆனி),09]
{23-06-2020}
---------------------------------------------------------------------------------------------
திருத்துறைப் பூண்டியிலிருந்து
 16 கி.மீ  தென் மேற்கே
 உள்ள இடும்பவனம் கோயில்.

என்னிடம் உள்ள
 “சூடாமணி நிகண்டு” புத்தகம். 

கூண்டுக்கிளி

பறந்து போன பச்சைக்கிளி !

என் தங்கை 
 திருமதி.கல்யாணி : 
மறைவு: 13-10-2019.


கதிரவனைக் குறிப்பதற்குத் 
தமிழில் தான் 
எத்தனைச்  சொற்கள் !





Tuesday, May 5, 2020

காலச் சுவடுகள் (60) : 2018,19 நிகழ்வுகள் - இன்பமும் துன்பமும் !


தமிழ்ப் பணி மன்ற ஆட்சியர் திரு.வை.வேதரெத்தினம் அவர்கள் எழுதும் தன்வரலாறு (AUTOBIOGRAPHY) !

காலச் சுவடுகள் (60) : 2018,19 நிகழ்வுகள் !

 இன்பமும் துன்பமும் !

 -----------------------------------------------------------------------------------

வேலூர், திரு.மீ.இராசேந்திரன் - திருமதி கற்பகம் இணையரின் மகன் திரு.இரா.அருண்மொழித் தேவன் பொறியியல் பட்டதாரி. இந்திய மாநில அளகையின் (STATE BANK OF INDIA)) செய்யாறு கிளையில் உதவி மேலாளராகப் பணிபுரிகிறார். இவருக்கும், வேதாரணியம் வட்டம் தென்னடாரைச் சேர்ந்த அன்புத் தாமரை என்பவருக்கும் 2018 -ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 11 -ஆம் நாள் திருமணம் நடைபெற்றது !

அப்போது நான் ஓசூரில் இருந்ததால், திருமணத்திற்குச் செல்ல இயலவில்லை.  திருமணம் நிகழ்ந்து ஒரு வாரம் சென்ற பின் மணமக்கள் வேலூர் வந்தனர். அப்போது நானும் என் மனைவியும், மகள் இளவரசியும் வேலூர் சென்று மணமக்களை வாழ்த்தி மகிழ்ந்தோம் !

மாமரத்தில் காய்கள் நிரம்பக் காய்த்திருக்கின்றன. தோட்டக்காரர் கண்களில் இருந்துத் தப்பிச் சில காய்கள் இலைகளினூடே  ஒளிந்து கொண்டிருக்கின்றன. இயற்கையின் பார்வையிலிருந்து அவை எத்துணை நாள் தான் இவ்வாறு ஒளிந்து கொள்ள முடியும் ? அவற்றுள் ஒரு காய் நன்கு பழுத்துக் காணப்படுகிறது. ஒருநாள் அந்தப் பழம் காம்பிலிருந்து விடுபட்டு உதிர்ந்து விழுகிறது !

மனித வாழ்வும் அப்படித்தான் ! அகவை முதிர்வினால் என் பெரிய மாமனாரின் மகன் திரு.இரா.கணபதி 2018 ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம் 17 –ஆம் நாள் காலமானார்.  மாவட்ட நீதிபதியின் நேர்முக உதவியாளராகப் பணிபுரிந்து  ஏறத்தாழ 30 ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வுபெற்று, தஞ்சாவூர் சீனிவாசபுரம், இராசராச சோழன் நகரில் வாழ்ந்து வந்த அவர் உதிர்ந்த கனியானார் !

மரத்தின் கிளைகளில் எத்துணையோ இலைகள் தோன்றி இந்த உலகம் வாழ உயிர்வளியைத் (OXYGEN) தந்து கொண்டிருக்கிறது. நிலத்திணைகளும் (தாவரங்கள்) அவற்றின் இலைகளும் தான் மனிதனை வாழவைத்துக் கொண்டிருக்கின்றன. சில இலைகள் காற்றின் வீச்சுச் தாங்காமல் காம்பு ஒடிந்து வீழ்ந்து விடுகின்றன !

இலை முதிர்வடைந்து பழுத்துக் காம்புடன் கிளையிலிருந்து விடுபட்டு உதிர்வது இயற்கையின் நேர்வு ! ஆனால் பழுப்படையும் முன் கிளையிலிருந்து  ஒடிந்து விழுவது எதிர்பாரா நிகழ்வாகிறது. அகத்தியன் பள்ளி, பயத்தவரன் காடு திரு.மு.குமரப்பாவின் மறைவு யாரும் எதிர்பாரா நிகழ்வு. என் கடைசித் தங்கை  திருமதி. சுமதியின் கணவரான திரு.சிங்காரவேலுவின்  தம்பி அவர் ! ஆசிரியராகப் பணியாற்றி சில ஆண்டுகளுக்கு முன்பு தான் ஓய்வு பெற்றவர். 2019 –ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம், 24 –ஆம் நாள், ஒடிந்து விழுந்த இலையானார் திரு.குமரப்பா !

நமக்கு வேண்டிய ஒருவர் மறைந்து போனால் நம் உள்ளம் துன்பியல் உணர்வுகளால் துடித்துப் போகிறது. அதுபோன்றே, 2019 -ஆம் ஆண்டு, ஏப்பிரல் மாதம் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலும் சிலருக்குத் துன்பியல் உணர்வுகளையும், வேறு சிலருக்கு இன்பியல் உணர்வுகளையும் தந்துவிட்டு மறைந்து போனது ! தமிழ்நாட்டில் தனித்துப் போட்டியிட எந்தக் கட்சிக்கும் துணிவில்லை: வலுவும் இல்லை ! இத்தேர்தலில் தி.மு.., இந்தியப் பேராயக் கட்சி, .தி.மு., வி.சி.., இந்தியப் பொதுவுடைமைக் கட்சி, இந்திய மார்க்சீயப் பொதுவுடைமைக் கட்சி, கொங்கு நாடு மக்கள் கட்சி, முசுலிம் லீக், இந்திய சனநாயகக் கட்சி ஆகியவை கூட்டுச் சேர்ந்து ஒரு அணியாகப் போட்டியிட்டன !

...தி.மு., பா..., தே.மு.தி., .மா.கா,  ஆகியவைக் கூட்டுச் சேர்ந்து இன்னொரு அணியாகப் போட்டியிட்டன.  தேர்தல் முடிவுகள் இந்த அணிக்கு நற்பலன்களை அளிக்க வில்லை !

தி.மு. 20 இடங்களையும், இந்தியப் பேராயக் கட்சி புதுச்சேரி உள்பட 10 இடங்களையும், இந்தியப் பொதுவுடைமைக் கட்சி 2 இடங்களையும், இந்திய மார்க்சீயப் பொதுவுடைமைக் கட்சி 2 இடங்களையும் பெற்றன.  .தி.மு., வி.சி.., கொ.நா.., ..., மு.லீ ஆகியவை ஒவ்வொன்றும் ஒரு இடத்தில் வென்றன. வி.சி.க வேட்பாளர் ஒருவரும், ... வேட்பாளரும், கொ..க வேட்பாளரும் ம.தி.மு.க வேட்பாளரும் தி.மு.., சின்னத்தில் போட்டியிட்டு வென்றதால் தி.மு.., வின் வெற்றிக் கணக்கு 24 ஆகிறது !

...தி.மு.க பெரியகுளம் தொகுதியில் மட்டும் வெற்றி பெற்று தன் கணக்கில் வென்ற இடம்  1   என நிறுவிக் கொண்டது. தி.மு.., அணியினருக்கு இன்பியல் உணர்வையும், ...தி.மு.க அணியினருக்குத் துன்பியல் உணர்வையும் தந்தது நாடாளுமன்றத் தேர்தல். அனைத்திந்திய அளவில் பாரதிய சனதாக் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்று, அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியில் அமர்ந்தது ! திரு.நரேந்திர மோடி இரண்டாவது முறையாக இந்திய அரசின் தலைமை அமைச்சர் ஆனார் !

துன்பியல் உணர்வுகளில் துடித்துப் போன அ...தி.மு. அணியினரைப் போல் 2019 –ஆம் ஆண்டு, சூன் மாதம் 24 –ஆம் நாள் நானும் துடித்துப் போனேன் ! அன்று தான் என் மைத்துனரும் என் மனைவியின் தம்பியுமான திரு.சீவானந்தம் காலமானார். இருப்பூர்தித் துறையில், பணியாற்றி வந்த திரு.சீவானந்தம், பணியிலிருந்து ஓய்வு பெறுவதற்கு முன்பே இறந்து போனார் !

நாகப்பட்டினம் அரசினர் தொழிற்பயிற்சி  நிலையத்தில் என் முயற்சியால்  மின்னுந்து அகச்சுருள் அமைப்புப் பணியில் குறுகிய காலப் பயிற்சி பெற்றவர் திரு.சீவானந்தம். அந்தச் சான்றின் அடிப்படையில், அவரது பெரியப்பா மகன் திரு.இரா.அரங்கராசன் அவர்களின் உதவியால் இருப்பூர்தித் துறையில் பணியில் சேர்ந்தார். நல்லொழுக்கம் இல்லாத  நண்பர்களின் நட்பால், மதுப் பழக்கத்திற்கு ஆளாகி இறுதியில், திரு.சீவானந்தம் தன் உயிரையும் துறந்தார் !

ஒழுக்கம் இல்லாத நண்பர்கள் அமைந்துவிட்டால், எந்த மனிதனின் வாழ்வும் அலங்கோலம் ஆகிவிடும் என்பதற்கு திரு.சீவானந்தமே எடுத்துக் காட்டு ! மனைவி, மற்றும் மூன்று பிள்ளைகளைத் தவிக்க விட்டுவிட்டு மறைந்து போன திரு.சீவானந்தத்தின்  முடிவைப் பார்த்தாவது மது அருந்தும் நண்பர்கள் அதை விட்டொழிப்பார்களாக !

சக்கரை நோய் என்னும் நீரிழிவு (DIABETES), அரத்த உயர் அழுத்தம் (HIGH BLOOD PRESSURE), சிறுநீரகச் செயலிழப்பு (KIDNEY FAILURE) மூன்றும் ஒருதாய் வயிற்றில் பிறந்த உடன்பிறப்புகள் போன்றவை. சக்கரை நோய் இருப்பவர்கள் அதைக் கட்டுக்குள் வைக்காவிட்டால், மற்ற இரண்டும் அவரிடம் கேளாமலேயே வந்து சேரும். அதுபோல் அரத்த உயர் அழுத்தம் இருப்பவர்கள் அதை அடக்கி ஒடுக்கி வைக்காவிட்டால் ஏனைய இரண்டும் தாமாகவே வந்து அவரிடம் ஒட்டிக் கொள்ளும் !

என் மைத்துனரும் ஓய்வு பெற்ற உடற்கல்வி இயக்குநருமான திரு. மகாதேவனுக்கு எப்படியோ சக்கரை நோய் (DIABETES), வந்து அவரைத் தழுவிக் கொண்டது. சக்கரை நோயைக் கட்டுக்குள் வைப்பதில் அவர் விழிப்படையத் தவறினாரோ என்னவோ, சிறுநீரகச் செயலிழப்புக்கு (KIDNEY FAILURE) ஆளானார் !

2016 –ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம், சிறுநீரகச் செயலிழப்பு (KIDNEY FAILURE), சென்னை விசயா மருத்துவ மனையில் உறுதி செய்யப்பெற்று, அதன்பின் வாரம் ஒருமுறை, இரு முறை என அவ்வப்போதைய உடல் நிலைமைக்குத் தக்கவாறு அரத்தத் தூய்மை (DIALYSIS) செய்து கொண்டு வந்தார். உடலின் உள் உறுப்புகள் சிதைவுற்றால் எத்துணை நாள்களுக்குத்தான் மருத்துவத்தால் உயிரைப் பிடித்து நிறுத்தி வைக்க முடியும் ?

மூன்று ஆண்டுகள் உயிர்ப் போராட்டத்திற்குப் பிறகு இறுதியில் 2019 –ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 29 ஆம் நாள் அவர் தனது உயிர் மூச்சை நிறுத்திக் கொண்டார். விழிப்புக் குறைவே அவரது உயிருக்கு ஊறாக அமைந்து விட்டது. சக்கரை நோயுள்ள நண்பர்கள் மாதம் ஒருமுறை சிறு நீரில் உள்ள சக்கரை அளவையும், இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை அரத்தச் சக்கரை அளவையும் கணித்து, அவற்றைக் கட்டுக்குள் வைத்துக் கொள்ளுங்கள் என்பதே அவர்களுக்கு நான் தெரிவிக்க விழையும் செய்தி !

இரண்டு மகன்களுக்கும் திருமணம்  செய்து வைத்து விட்டு, இறந்திருந்தாலும்  கூட, அவரது இழப்பு இன்னும் பல ஆண்டுகளுக்கு அந்தக் குடும்பத்தில் துன்பியல் உணர்வுகளைத் தூவிக் கொண்டு தான் இருக்கப் போகிறது. காலம் தான் அதைத் துடைத்தெறிய வேண்டும் !

ஓய்வூதியரான திரு.மகாதேவனின் மனைவிக்குக் குடும்ப ஓய்வூதியம் பெற்றிடும் பொருட்டு உரிய விண்ணப்பங்களை நானே முழுமையாக நிறைவு செய்து தந்து விட்டு வந்தேன்.  ஆனால் இரக்க உணர்வில்லாத சில அலுவலர்கள் உருபா ஐந்தாயிரம் கையூட்டுப் பெற்றுக் கொண்ட பின்பே அதற்கு ஆவன  செய்தனர். சாவிலும் காசு பார்க்கும் இத்தகைய சண்டாளர்கள் இருக்கும் வரை, தமிழ்நாட்டில் இரக்க உணர்வு எப்படி உயிர் பிழைத்து இருக்கப் போறது ?

---------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
(kadikaivedarethinam@gmail.com)
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.பி: 2051, ஆடவை (ஆனி),08]
{22-06-2020}
---------------------------------------------------------------------------------------------

செல்வன்.அருண்மொழித் தேவன்  
செல்வி. அன்புத் தாமரை 
இணையர். 









காலச் சுவடுகள் (59) : 2018 நிகழ்வுகள் - துயில் கொண்ட சூரியன் !



தமிழ்ப் பணி மன்ற ஆட்சியர் திரு.வை.வேதரெத்தினம் அவர்கள் எழுதும் தன்வரலாறு (AUTOBIOGRAPHY) !

காலச் சுவடுகள் (59) : 2018 நிகழ்வுகள் !

 துயில் கொண்ட சூரியன் !

-----------------------------------------------------------------------------------
நாட்டுக் கொடியானாலும் சரி, கட்சிக் கொடியானாலும் சரி, எப்பொழுதும் உயரப் பறக்க வேண்டும். அரைக் கம்பத்தில் பறப்பது இழப்பின் அறிகுறி ! 2018,19  ஆம் ஆண்டுகளில் உற்றார் உறவினர் வகையிலும், அரசியல் அரங்கிலும் சில இழப்புகளைச்  சந்தித்து மனம் கலங்கி இருக்கிறேன் ! 

தமிழ் நாட்டில் அரசியல் அரங்கில் ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்திய கலைஞர் மு.கருணாநிதியின் மறைவு 2018 –ஆம் ஆண்டு, ஆகத்து மாதம், 7 –ஆம் நாள் நிகழ்ந்தது. ஒரு நாணயத்திற்கு இரண்டு பக்கங்கள் இருப்பது போல், கலைஞர் என்னும் ஆளுமைக்கும்  இரண்டு முனையங்கள் உண்டு. எதிர்மறைப் பயன்களை (NEGATIVE  EFFECTS) விளைவித்த  கலைஞரின் இன்னொரு முனையத்தை நாம் பார்க்க வேண்டியதில்லை !

நேர்மறை (POSSITIVE), எதிர்மறை  (NEGATIVE) என்னும் இரண்டு முனையங்கள்  இல்லாத மனிதன் இந்த உலகில் யாருமே இல்லை; இருக்கிறான் என்று யாராவது சொன்னால் அவன் பித்தம் பிடித்துப் பேசுகிறான் என்று பொருள். இனிக்கின்ற அடிப்பகுதியும் கசக்கின்ற நுனிப் பகுதியும் ஒரே கரும்பில் தான் இருக்கின்றன. நுனிப் பகுதி கசக்கிறது என்பதற்காக மொத்தக் கரும்பையுமே நாம் தூக்கி எறிந்துவிட முடியாது !

கலைஞரின் எதிர் முனையத்தைப் பற்றி (NEGATIVE END)  இப்போது பேசுவதால் எந்தப் பயனும் இல்லை. கலைஞரின் நேர் முனையத்தை (POSSITIVE END)  மறைத்து விடுவதால் அவரது புகழ் குறைந்துவிடப் போவதும் இல்லை !

நன்றி மறப்பது நன்றன்று; நன்றல்லது 
அன்றே மறப்பது நன்று !    (குறள்)

நன்றல்லாததைத்  திரும்பத் திரும்பப் பேசிக் கொண்டு இருப்பது  வள்ளுவரின் வழியாகாது ! நன்றைப் பற்றி மட்டும் நினைவு கூர்வோம் !

திருத்துறைப் பூண்டியிலிருந்து 18.3 கி.மீ தொலைவில் உள்ள திருக்குவளை என்னும் ஊரகத்தில் இசைவேளாளர் குடும்பத்தில் பிறந்தவர் கருணாநிதி. பன்முனை ஆளுமை மிக்க கருணாநிதி பள்ளி இறுதி வகுப்பு வரைப் படித்தவரேயன்றி  பட்டப் படிப்புப் படித்தவரும் அன்று;  தமிழ்க் கல்லூரியில் சேர்ந்து பயின்று புலவர் பட்டம் பெற்றவரும் அன்று !

தமிழ்ப் புலவர்களே நாணித் தலை குனியும் அளவுக்குத் தமிழில் பெரும் ஆற்றல் பெற்றிருந்தவர் கருணாநிதி. பராசக்தி, மனோகரா, பூம்புகார், மந்திரிகுமாரி, திரும்பிப் பார்  போன்ற திரைப்படங்களின் உரையாடல்களால் ஈர்க்கப் பெறாத  தமிழர்கள் 1950, 1960 –களில் இவ்வுலகில் யாரேனும் உண்டா ?

வாழ்க்கை என்னும் ஓடம்”, “தப்பித்து வந்தானாம்மா”, ”பொருளே இல்லார்க்குத் தொல்லையா,” “இல் வாழ்வினிலே ஒளி ஏற்றும் தீபம் ”, ”தேசம் ஞானம் கல்வி”, “பூமாலை நீ ஏன் வீணே”, போன்ற பாடல்கள்  கருணாநிதியின் தூவல் முனையிலிருந்து தோன்றியவை அல்லவா ?

சாக்ரடீசு”, “அனார்கலி”, “சேரன் செங்குட்டுவன்”, ”கலிங்கப் போர்போன்ற ஒற்றையாள் (ஓரங்க) நாடக உரையாடல்களுக்கு மயங்காத உள்ளங்கள்  1950 - 1960 வாக்கில் தமிழ்நாட்டில் ஒன்றேனும் உண்டா ?

கூர்மையான தமிழ் உரையாடல்களைச் செதுக்கித் தந்த சிற்பியைப் பார்த்து சிலர்தெலுங்கன்என்று இழி மொழி கூறுகின்றனர். பிள்ளையே இல்லாதவள் ஐந்தாறு பெற்றவளைப் பார்த்துமலடிஎன்று கூறுவது என்ன ஞாயமோ ? “வடுகன்என்று கூறி வம்பு பேசுவோர் திருக்குவளைக்குச் சென்றுதெலுங்குபேசுவோரைத் தேடிப் பார்க்கட்டும் ! தமிழனைத் தமிழனே தாழ்த்திப் பேசும் இழிநிலை ஒழிய வேண்டும் !

கருணாநிதியின் சில முடிவுகளில் அல்லது செயல்களில் எனக்கும் கூட மாறுபட்ட கருத்து (DISSENT VIEWS) உண்டு. சற்றும் பிடிக்காதவையும் உள்ளன ! அதற்காக அவரது நற் செயல்களை ஒதுக்கித் தள்ளிவிட முடியாது !

கருணாநிதியின் ஆட்சிக் காலத்தில் நிறைவேற்றப் பெற்ற நல்ல திட்டங்கள் சிலவற்றைப் பட்டியலிட்டுப் பார்க்கலாம் !
01.ஆசியாவிலேயே பெரிய அண்ணா நூற்றாண்டு நூலகம் கோட்டூர்புரத்தில் அமைப்பு.
02. அமைப்பு சாராத் தொழிலாளருக்கு நலவாரியங்கள் பத்துக்கும் மேற்பட்டவை  அமைப்பு.
03.அரசு அலுவலர்களுக்குத் தொல்லையாக இருந்த மந்தணக் கோப்பு (இரகசியக் குறிப்பு) முறை ஒழிப்பு.
04.அரசு அலுவலர்கள் தம் கணக்கில் சேர்ந்துள்ள ஈட்டிய விடுப்பை ஒப்படைத்துவிட்டு  அதற்கு ஈடாக உரிய ஊதியம் பெறும் ஈட்டிய விடுப்பு ஒப்புவிப்புத் திட்டம் அறிமுகம்.
05.அரசு விழாக்களில் நீராருங் கடலுடுத்த....” என்னும் தமிழ்த் தாய் வாழ்த்து பாடுதல் அறிமுகம்
06.அரசு ஊழியர் பணிக் காலத்தில் இறந்துவிட்டால்அவர் குடும்பத்திற்கு நிதியளிக்கும் குடும்பப் பாதுகாப்பு நிதித் திட்டம் அறிமுகம்.
07.அறநிலையத் துறை மூலம் கோயில்களில் திருமண மண்டகங்கள் பல ஊர்களில் கட்டி பெற்றோர்களின் இன்னல்களைத் துடைத்தமை.
08. அனைத்து சாதியினரும் அர்ச்சகராகச் சட்டம் கொணர்ந்ததுமுதல் அணியினருக்கு பயிற்சி அளித்து வேலை வாய்ப்புக்குத் தகுதி பெறச் செய்தமை.
09.ஆதிதிராவிடர்கள் மற்றும் பிற்படுத்தப்பட்டோருக்கு அரசு அளவில் ஒரே துறை இருந்ததை மாற்றி தனித்தனித் துறைகள் அமைத்தமை
10.ஆதிதிராவிடர்களுக்கு இலவச கற்காரை (CONCRETE) வீடுகள் கட்டித் தந்தமை.
11.இந்தியாவிலேயே முதன் முறையாக மகளிருக்கு உள்ளாட்சிகளில் 33 % இட ஒதுக்கீடு அளிப்பு.
12.இந்தியாவிலேயே முதன்முறையாக அரசுப்பணியில் பெண்களுக்கு 30 விழுக்காடு இட ஒதுக்கீடு.
13.இந்தியாவிலேயே முதன்முறையாக பெண்களுக்குச் சொத்தில் சம உரிமை அளித்து 1989 ஆம் ஆண்டு அரசாணை வெளியீடு.
14.இரவலர் மறுவாழ்வு இல்லம்செங்கற்பட்டினை அடுத்த பரனூரில் அமைப்பு.
15.இராசமன்னார் குழுவை 1969 ஆம் ஆண்டு அமைத்து மாநில உரிமைகள் பற்றிய ஆய்வறிக்கை தயாரித்து அளித்தமை
16.  உழவர் சந்தைகள் நூற்றுக் கணக்கான நகரங்களில் அமைப்பு
17. ஊனமுற்றோர் மறுவாழ்வுத் திட்டம் கொண்டுவந்தது.
18.ஏழைகளுக்கு பண்டிகை நாள்களில் இலவச அரிசி – ஆடைகள் வழங்கல்.
19.  ஏழைப்பெண்கள் திருமண உதவித்திட்டம் அறிமுகம்.
20.  ஓசூரில் சிப்காட் (01) ” தொடங்கி பலநூறு தொழிற்சாலைகள் கொண்டு வந்தமை.
21.  கட்டபொம்மன் கோட்டைமறு உருவாக்கம்
22.கண்ணொளி வழங்கல் திட்டத்தின் கீழ் ஆண்டு தோறும் இலவச கண் ஆய்வு முகாம்கள் நடத்திஅறுவை சிகிச்சை செய்துதேவைப்படுவோருக்கு இலவயமாக  கண்ணாடிகள் வழங்கல்.
23. கலப்பு மணம் செய்துகொண்ட குடும்பத்துப் பெண்களுக்கு பேறுகால நிதியுதவித் திட்டம்.
24.கலைஞர் காப்பீட்டுத் திட்டம் (2009 முதல்) மூலம் அரசு அலுவலர்கள் அறுவை  சிகிச்சையை தனியார் மருத்துவ மனைகளிலும் செய்து கொள்ள   வாய்ப்பு ஏற்படுத்தித் தந்தமை
25.  கால்நடைப் பல்கலைக் கழகம் சென்னையில் அமைப்பு
26. காவலர்கள் குறை தீர்க்க இந்தியாவிலேயே முதன்முதலாக காவலர்கள்  குறை களைவு ஆணையம் அமைப்பு.
27.குடிசை மாற்று வாரியம் திரு.இராமஅரங்கண்ணல் தலைமையில் 1970 -ஆம் ஆண்டு.அமைத்துகுடிசைகளில் வாழ்ந்தவர்களை மாடிவீடுகளில் குடியேறி வாழச் செய்தமை
28. குமரி முனையில் வள்ளுவருக்கு  133 அடி உயரச் சிலை நிறுவியமை
29.  குளித்தலை முசிறி இடையே காவிரி ஆற்றில் மிக நீண்ட பாலம் (ஒன்றரை கி.மீ கட்டித் தந்து இப்பகுதி மக்களின் குறை தீர்த்தமை.
30.  கையிழுவை வண்டிகளை (ரிக்க்ஷாக்களை) ஒழித்து இலவச மிதியிழுவை (சைக்கிள் ரிக்க்ஷாக்கள்) வழங்கியது.
31.கொள்ளிடம் – கோடிக்கரை கூட்டுக் குடி நீர்த் திட்டம் கொண்டு வந்தமை
32.கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையம் அமைப்பு. 6-6-1999 அன்று கால்கோள் நடத்தி கட்டுமானப் பணிகள் நிறைவேற்றம்.
33.  கோவில்களின் நிர்வாகத்தின் கீழ் ஆதரவற்ற சிறுவர்களுக்குப் புகலிடம் தரும் கருணை இல்லங்கள். அமைப்பு.
34.  சிற்றூர் மக்களுக்குப் பயன்படும் வகையில் சிற்றுந்து வசதி (மினி பஸ்அறிமுகம்.
35.செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகர முதலித் திட்டம் தேவநேயப் பாவாணரை இயக்குநராக அமர்வு செய்து உருவாக்கம்
36.சென்னைகத்திப் பாராவில் வண்ணத்துப் பூச்சி வடிவ மேம்பாலம் கட்டிபோக்கு வரத்து நெரிசலைத் தவிர்த்தமை.
37.சென்னையைச் சுற்றிலும் ஹூண்டாய்போர்டுசெயிண்ட் கோபெயின் போன்ற பெருந் தொழிற்சாலைகள் கொண்டு வந்து வேலை வாய்ப்பை உருவாக்கியமை.
38.சேரசோழபாண்டியன்பல்லவன் நினைவாகப் போக்குவரத்துக் கழகங்கள் அமைப்பு
39. தமிழகத்திலுள்ள அனைத்து ஊரகங்களுக்கும் (கிராமங்களுக்கு தெரு மின்விளக்கு வசதி விரிவாக்கம்.
40.தமிழில் படித்தோருக்கு 20 % இட ஒதுக்கீடு சட்டம் அறிமுகம்.
41. தமிழுக்குச் செம்மொழி என்னும் தகுதி பெற்றமை. 12-10-2004 -ல் அரசாணை வெளியீடு.
42.  தமிழ் இணையப் பல்கலைக் கழகம் அமைப்பு. 1999 ஆம் ஆண்டு
43. திரு.டி.ஆர்.பாலுவை நடுவணரசில் தரைவழிப் போக்குவரத்துத் துறை அமைச்சராக்கிதமிழ் நாடெங்கும் சாலைகளை விரிவாக்கம் செய்து மேம்பாலங்களை நூற்றுக் கணக்கில் கட்டி சாலைப் போக்குவரத்தில் மாபெரும் புரட்சி ஏற்படுத்தியமை.
44.  திரு..கோ.இரா. (M.G.R) ஆட்சிக் காலத்தில் இட ஒதுக்கீட்டுப் போராட்டத்தில் துப்பாக்கிச் சூட்டுக்குப் பலியான வன்னியர் இன மக்களின் குடும்பத்தினருக்கு நிதி அளித்து அரசாணை வெளியீடு..
45.  திருக்குறளுக்கு உரை எழுதி வெளியிட்டமை.
46.  திருச்சி (காவிரி) இராமநாதபுரம் கூட்டுக் குடிநீர்த் திட்டம் கொண்டு வந்தமை.
47.  திருவள்ளுவர் பல்கலைக் கழகம் வேலூரில் அமைப்பு
48.  தொல்காப்பியப் பூங்கா நூல் வெளியீடு
49.தொழு நோயாளர் மறுவாழ்வு இல்லம் திருச்சிமனையேறிப்பட்டியில் அமைப்பு.
50.  நாமக்கல் கவிஞர் இராமலிங்கனாருக்கு ஓய்வூதியம் வழங்க அரசாணை வெளியீடு.
51.  நெல்லைபரலி சுநெல்லையப்பருக்கு ஓய்வூதியம் வழங்க அரசாணை வெளியீடு.
52.  நோயாளர் சேவை ஊர்தி (ஆம்புலன்ஸ்) 108 சேவை 2008 முதல் அறிமுகம்
53. பணிக்காலத்தில் இறந்த அரசு ஊழியரின் பிறங்கடைக்கு (வாரிசுக்கு) அரசு வேலை.
54.  பல மாவட்டங்களில் புதிய கலைக் கல்லூரிகள்  அமைப்பு.
55. பள்ளிகல்லூரி.டி..மாணவர்களுக்கு இலவச பேருந்துப் பயணச்சலுகை அளிப்பு.
56.  பள்ளிகளில் சமச்சீர் பாடத்திட்டம் அறிமுகம்
57.  பாரதிதாசன் பல்கலைக் கழகம் திருச்சியில் அமைப்பு
58. புதிய தலைமைச் செயலகம் கட்டடம் ஓமந்தூரார் தோட்டத்தில் அமைப்பு
59.  புதிய மாவட்டங்கள் பல உருவாக்கம்.
60.  பூம்புகார்புதிய நகரம் உருவாக்கி சுற்றுலா இடமாக்கியது.
61.  பெரியார் பலகலைக் கழகம் சேலத்தில் அமைப்பு.
62.  மகளிர் இலவசப் பட்டப்படிப்பு திட்டம் அறிமுகம்.
63.  மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் நெல்லையில் அமைப்பு
64. மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 20 விழுக்காடு இட ஒதுக்கீடு அளித்து அரசாணை வெளியீடு.
65.மெட்ராஸ் என்னும் பெயரை 1996 முதல் சென்னை என மாற்றி அமைத்தமை.
66.மென்பொருள் தொழில் மேம்பாட்டுக்கு சென்னைதரமணியில்  டைடல் பூங்கா (TIDAL PARK) அமைப்பு
67. மொழிப்போர்  ஈகிகளுக்கு (தியாகிகளுக்கு) ஓய்வூதியம் அளிப்புநினைவுச் சின்னங்கள் ஏற்படுத்தியமை.
68.  வள்ளுவர் கோட்டம் அமைப்பு. 1973 ல் அடிக்கல் நாட்டி, 1976 -ல் பணி முடிப்பு.
69.விடுதலைப் (சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு வாழ்நாள் ஓய்வூதிய அளவு உயர்வு.
70.விவசாயத் தொழிலாளர்களுக்கு குடியிருப்பு மனை வழங்கல் திட்டம்நெல் பயிர் செய்யும் உழவர்களின் உரிமைச் (அனுபோகதாரர்கள்) சட்டம் முழுமையாக  நிறைவேற்றம்.
71.விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கல்.
72.தாழ்த்தப் பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த வரதராசன் என்பவரை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக்கி, முதன்முதலாகத் தாழ்த்தப் பட்ட இனத்தவரை உயர் நீதி மன்றத்தில்  அமர வைத்தமை.
73.மருத்துவ சமுதாயத்தைச் சேர்ந்த  திரு.எம்.எம். இராசேந்திரனை (மேனாள் தலைமைச் செயலர்) ஒரிசா மாநில ஆளுநராக அமர்வு  செய்ய வைத்தமை.
74. செங்கற்பட்டு அருகே “மறைமலை நகர்” என்னும் பெயரில் துணை நகரம் உருவாக்கி, குடியிருப்பு வசதிகளை ஏற்டுத்தித் தந்தமை.
75.திருக்கோயிகளில் இறைவன், இறைவியர் பெயருக்கு முன் சேர்க்கப்பட்ட “ஸ்ரீ” யை மாற்றிவிட்டு “அருள்மிகு” எனும் முன்னொட்டை நடைமுறைக்குக் கொண்டுவரச் செய்தது.

பதவிப் பித்துப் பிடித்த போலித் தமிழர்கள் கருணாநிதிக்குக் கொடுத்த இடைஞ்சல்கள் சொல்லுந் தரமன்றுநடுவணரசுக்குக் காட்டிக் கொடுக்கும் செயல்களில் இப்போலித் தமிழர்கள் ஈடுபடாமல் இருந்திருந்தால்இந்தியப் பேராயக் கட்சியையோபாரதிய சனதாக் கட்சியையோ சார்ந்து இருக்கும் நிலையைக் கருணாநிதிக்கு  உருவாக்காது இருந்திருந்தால்இவரது ஆட்சிக் காலம் தமிழுக்கும தமிழகத்திற்கும் பொற்காலமாக இருந்திருக்கும் !

அறிவுக் கூர்மையும்செயல் திறனும்எளிய மக்களின் இன்னல்களைப் புரிந்து கொள்ளும் உளப் பாங்கும் நிறைந்த கருணாநிதியின் இறப்புதமிழர்களுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு !

தமிழுக்கும் தமிழ் நாட்டுக்கும் உழைக்கக் கூடிய இன்னொரு செயல் வீரரைத் தமிழகம் எப்போது காணுமோ ? ஒளி தந்த சூரியன் மெரீனா” கடற்கரையில் துயில் கொள்கிறதுஅடுத்து இன்னொரு சூரியன் எழுந்து வருமா ?

----------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.பி: 2051,ஆடவை (ஆனி),07]
{21-06-2020}
--------------------------------------------------------------------------------------