name='description'/> கடிநெல்வயல் வை.வேதரெத்தினம் வலைப்பூ !: 2020

காலச்சுவடுகள் ! வாழ்க்கையில் நான் கடந்து வந்த பாதை பற்றிய வரலாறு !

விரும்பும் பதிவைத் தேடுக !

Thursday, June 18, 2020

காலச் சுவடுகள் (62) : 2019 நிகழ்வுகள்- நன்றி ! வணக்கம் ! !


தமிழ்ப் பணி மன்ற ஆட்சியர் திரு.வை.வேதரெத்தினம் அவர்கள் எழுதும் தன்வரலாறு (AUTOBIOGRAPGY) !

காலச் சுவடுகள்(62) : 2018 நிகழ்வுகள்  !

                                        நன்றி ! வணக்கம் !

--------------------------------------------------------------------------------------------

தஞ்சாவூரில் புதிய வீடு கட்டி அதில் 2004 –ஆம் ஆண்டு குடியேறிய பின்பு நான் என் மனைவி, மகள் இளவரசி ஆகியோர் மட்டுமே  அங்கு வாழ்ந்து வந்தோம். இளவரசிக்கு 2004 -ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் திருமணம் ஆன பின்பு நானும் என் மனைவியும் மட்டுமே குடும்ப உறுப்பினர்கள்.!

சென்னையில் பணிபுரிந்து வரும் மகன் இளம்பரிதி நான்கு அல்லது ஆறுமாத இடைவெளியில் எங்களை வந்து பார்த்துச் செல்வார். எங்கள் வாழ்க்கை இவ்வாறு ஒரே நேர் கோட்டில் சென்று கொண்டிருந்தது. இடையில் ஆறு மாத காலம் கணியம் (ASTROLOGY) கற்றுக் கொண்டேன். அதை முழுமையாகக் கற்றறிந்தாலும், அதில் எனக்கு நம்பிக்கை வரவில்லை. எனவே அதை ஒரு தொழிலாக மேற்கொள்ள நான் விரும்ப வில்லை !

நான் குடியிருந்த பகுதியில் திருவள்ளுவர் குடியிருப்போர் நலச் சங்கத்தை 2006 –ஆம் ஆண்டு நிறுவிய பின்பு என் கவனம் அதில் திரும்பியது. எனக்கு அது பொழுது போக்காகவும் இருந்தது; அதே சமயத்தில் மன நிறைவு தரும் மக்கள் சேவையாகவும் அமைந்தது !

தமிழ்ப் பணி மன்றம் என்னும் முகநூற் குழுவை (GROUP) 2015 –ஆம் ஆண்டு   தொடங்கினேன். என் தமிழ் வேட்கையைத் தணித்துக் கொள்ள அரியதோர் நீர்நிலையாக எனக்கு அது அமைந்திருந்தது; அமைந்திருக்கிறது ! பெயருக்கு ஏற்றபடித்தமிழ்ப் பணிஆற்ற இம்முகநூற் குழுவை  முழுமையாகப் பயன் படுத்திக்கொள்வது என் நோக்கம் ! இந்த நோக்கத்துடன் தான் கடந்த ஆறு ஆண்டுகளாக இக்குழுவின் ஆட்சியர் (ADMIN) பொறுப்பில் அமர்ந்து அதை இயக்கிவருகிறேன்.!

புதிய தமிழ்ச் சொற்கள் பல உருவாக்கித் தமிழுக்கு அணி சேர்க்க வேண்டும் என்பது என் நீண்ட நாளைய அவா ! ஒரு புதிய சொல்லை உருவாக்கும் போது அச்சொல் எவ்வகையில் பொருத்தமானது என்று விளக்கினால் தானே தமிழ் கூறும் நல்லுலகத்தில் அது நிலைத்து நிற்கும் ! எனவே அது பற்றிய 54 ஆய்வுக் கட்டுரைகளைத் தமிழ்ப் பணி மன்றத்தில் வெளியிட்டிருக்கிறேன்.. எழினி (MOBILE), பல்லவி (COOKER), பேடுருளி (MOPED), அகழி (CUTTER), குயிலி (DRILL BIT), எண்மம் (DIGITAL), அல்லியம் (TRACTOR), பாவையுருளி (SCOOTY), அவிழகம் (MESS), அளகை (BANK), அழலி (IRON BOX), ஈர்மம் (PAINT), உமிழி (PUMP), செங்களம் (CHESS), சிலம்பு (SPANNAR), பயின் (RUBBER) போன்றவை அவற்றுள் சில !  

புதிய சொற்களை உருவாக்கினால் மட்டும் போதாது, தமிழகத்தில் மக்களிடையே பல துறைகளிலும் விழிப்புணர்வையும் தோற்றுவிக்க வேண்டும் என்று எண்ணினேன் ! என் எண்ணத்திற்குச் செயல் வடிவம் தரும் வகையில், “தாய்மொழிக் கல்வி,” “அரசியல் வேண்டாம்”, “ஆக்கம் கருதி முதல் இழக்கும் செய்வினை,” “ஆட்சி முறையில் சீர்திருத்தம் தேவை”, “வல்லுநர்கள் அமைச்சர்களாக வேண்டும்”, “இயற்கை வளங்கள் அழிப்பு,” “உடனடி உணவுகளை உதறித் தள்ளுங்கள்”, “கட்சி தொடங்கும் நடிகனை நம்பாதே,” “மயங்கிக் கிடக்கும் தமிழன்”, “விசுவநாதன் ! வேலை வேணும்என்பன போன்ற 58 விழிப்புணர்வுக் கட்டுரைகளையும் எழுதி வெளியிட்டு வந்திருக்கிறேன் !

தமிழ் மொழி வளர்ச்சிக்காக இவை தமிழ்ச் சொற்களே”, “கோளியலும் வடமொழித் திணிப்பும்”, “தமிழில் பேசுவோம்”, “தமிழையே எழுதுவோம்”, “மங்கி வரும் தமிழுணர்வு”, “மொழிச் சிதைவுக்கு இடம் தரலாகாது,” ”கரத்தை மறந்த தமிழர்கள்என்பன போன்ற 30 கட்டுரைகளைத் தமிழ்ப் பணி மன்றத்தில் எழுதி வெளியிட்டிருக்கிறேன் !

மாந்தப் பெயர்களைப் பற்றிய ஆய்வுக் கட்டுரைகள் பல தமிழ்ப் பணி மன்றத்தில் வெளிவந்திருக்கின்றன. அய்யாக்கண்ணு, இராமன், எல்லப்பன், கலியமூர்த்தி, காத்தமுத்து, குப்புச்சாமி, சொர்ணம், நரேஷ், நளினா, பாலையா, ஹேமலதா என்பன போன்ற பெயர்களின் பொருள் என்ன என்பதை விளக்கி 33 கட்டுரைகள் வெளியிட்டிருக்கிறேன். சரவணன், கிருஷ்ணசாமி, சௌந்தர்ராசன், மீனாட்சி, இந்திரன், மது, போன்ற பெயர்களைப் பற்றிய ஆய்வுக் கட்டுரைகள்வெளியிட்டு இருக்கிறேன் !

பாரதியார், பாரதிதாசன், இலக்குவனார், பரிதிமாற் கலைஞர், மறைமலை அடிகள், சோமசுந்தர பாரதியார், .வே.சா, இரா.பி.சேதுப்பிள்ளை, .வெள்ளைவாரணனார், ..அறவாணன், மேலப் பெருமழைப் புலவர் பொ.வே,சோமசுந்தரனார், கருப்பக்கிளர் சு..இராமசாமிப் புலவர், முனைவர் தமிழண்ணல், முனைவர்.மு.., போன்ற 31 தமிழறிஞர்களின் வாழ்க்கை வரலாற்றுச் சுருக்கத்தை நான்கு பக்க அளவில்  எழுதி வெளியிட்டு இருக்கிறேன் !

புறநானூறு, மூதுரை, பழமொழி, நான்மணிக் கடிகை, நல்வழி, நறுந்தொகை, திருப்புகழ், காளமேகம் பாடல்கள், குறுந்தொகை, குற்றாலக் குறவஞ்சி, சிறுபஞ்சமூலம், நந்திக் கலம்பகம் போன்ற இலக்கியங்களிலிருந்து 54 பாடல்களைத் தேர்ந்தெடுத்து, அருஞ்சொற் பொருளுடன் உரை விளக்கம் எழுதி வெளியிட்டிருக்கிறேன் !

இலக்கிய அறிமுகம் என்ற வரிசையில் பத்துப் பாட்டு, எட்டுத் தொகை, பதினெண்கீழ்க் கணக்கு நூல்கள், தொல்காப்பியம், மணிமேகலை, குண்டலகேசி, சீவக சிந்தாமணி, சிலப்பதிகாரம், தேவாரம், திருவாசகம் திருவருட்பா போன்ற 52 நூல்கள் / இலக்கியங்கள் / காப்பியங்கள் பற்றிக் கட்டுரை எழுதி வெளியிட்டு இருக்கிறேன் !

2016 –ஆம் ஆண்டு பொங்கல் திருநாளை முன்னிட்டு, பொங்கல் வாழ்த்துப் பாடல் போட்டி ஒன்றை அறிவித்து அதில் வெற்றி பெற்ற முப்பதுக்கும் மேற்பட்டோருக்குகவியருவி”, “கவிச்சுடர்பட்டங்களை வழங்கி, அச்சிட்ட சான்றிதழும் தந்து, அவர்களின் தமிழாற்றலைப் பெருமைப் படுத்தி இருக்கிறேன் !

திருமணமாகி  ஓசூரில் இருக்கும் என் பெண்கள் இருவரும் தஞ்சையில் நானும் என் மனைவியும் மட்டும் தனியாக இருப்பதை விரும்பவில்லை. ஓசூருக்கே வந்துவிடுமாறு அழைத்தனர். அவர்கள் அழைப்பை ஏற்று, தஞ்சாவூர் வீட்டை வாடகைக்கு விட்டுவிட்டு, 2019 ஆம் ஆண்டு மே மாதம் 20 -ஆம் நாள் தஞ்சையிலிருந்து புறப்பட்டுச் சீருந்து மூலம் ஓசூர் வந்தடைந்தோம். கடந்த ஓராண்டு காலமாக ஓசூரில் தான் என் தமிழ்ப் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது !

நான் அரசுப் பணிகளை ஏற்றிருந்த காலத்திலும் சரி, பணி ஓய்வுக்குப் பிந்திய காலத்திலும் சரி,  நான் அடைந்த பட்டறிவுகள் (அனுபவங்கள்) ஏராளம் ! ஏராளம் ! உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் உள்ள வேறுபாட்டை  எனக்கு உணர்த்திய காலப் பகுதி  இது !

அரசியலில் கலைஞரால் பயனடைந்தவர்கள், அவரால் தூக்கி விடப்பட்டவர்கள், அவரால் பதவிப் பொறுப்புகளில் அமர்த்தப்பட்டவர்களில் மிகப் பெரும்பான்மையோர்  அவரை விட்டு விலகிச் சென்றதும், அவருக்கு எதிராக அரசியல் செய்ததும் அரசியல் நோக்கர்கள் அறிந்த உண்மை !

என் வாழ்விலும், என்னால் பயனடைந்தவர்கள், என்னால் தூக்கிவிடப்பட்டவர்கள், என் உதவியைப் பெற்றவர்களில்  மிகப் பெரும்பான்மையோர் நான் நலமாக இருக்கிறேனா என்பதைக் கூட அறிந்து கொள்ளும் ஆர்வத்தைத் துறந்து விட்டவர்களாகவே இயங்கி வருகின்றனர் !

ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் பெரும்பாலும் நண்பர்களே உற்றுழி உதவுகின்ற உயரிய பண்பு உடையவர்களாக இருக்கின்றனர். உறவினர்கள் என்போர்உறவுஎன்பதன் உட்பொருளை மறந்தே வாழ்கின்றனர் ! உதவி செய்யும் பண்பு இக்காலத்தில் உறவினர்களிடம் மெல்ல மெல்ல மறைந்து வருகிறது !

என் புதல்விகளின் திருமணப் பணிகள் தொடங்கி, என் வாழ்க்கை வரலாறான காலச் சுவடுகளை ஆர்வமுடன் படித்துக் கருத்துரை எழுதுவது வரை, நண்பர்களின் பங்களிப்பே எனக்கு உதவி வந்திருக்கிறது !

நம் உறவினரின் வாழ்க்கை வரலாறு ஆயிற்றே, அவர் எத்துணை இன்னல்களை அடைந்தார், அவர் பெற்ற துய்ப்புகள் (அனுபவங்கள்) யாவை, அவற்றைத் தெரிந்து கொள்வோம், அவரது எழுத்து ஆர்வத்தை ஊக்குவிப்போம் என்னும் உணர்வின்றி வாளாவிருந்த சிலஉறவினர்களின் மன நிலையைகாலச் சுவடுகள் எனக்கு வெளிச்சம் போட்டுக் காட்டி இருக்கிறது

ஒரு துளி உதவியைக் கூட என்னிடமிருந்து பெறாத திரு.கணேசன் நடராசன், திரு.இரவி பசுபதி போன்ற தொலைநிலை உறவினர்கள் சிலரின் கருத்துரைகள் என்னை இன்பக் கண்ணீர் வடிக்க வைக்கிறது

என் நெருங்கிய நட்பு வட்டத்தில் கூட இதுவரை இடம்பெறாத திரு.மோகன் ஜெய், திரு.அன்பு அன்பழகன், திரு இராமலிங்கம் முருகையன், ஆகியோருக்கும் தமிழ்ப் பணி மன்ற உறுப்பினர்களான திரு.சண்முகம் இராமசாமி, திரு.திருமலைசாமி, திருமதி சுதமதி கார்த்திகேயன், திரு.தண்டாயுதபானி சாமிநாதன், திரு.சுந்தரம் இளங்கோவன், திரு.பாலு.இராமச்சந்திரன், திரு,அழகேசன் தனபால், திரு.முகுந்தன் தேவநாதன் போன்றோர் அன்றாடம்  காலச் சுவடுகளுக்குக் கருத்துரை வழங்கி வந்த பண்புக்குத் தலை வணங்குகிறேன் ! என்னிடம் எதையும் எதிர்பாராமல் இயங்கும் நண்பர்களையும், அவர்களது நட்பினையும் போற்றுகிறேன் !

உறவினர்களான  திரு.சீ.சம்பத், திரு.சி.மணிமாறன், திரு.மீ.இராசேந்திரன், திருமதி.செந்தமிழ்ச்செல்வி இராசேந்திரன், திருமதி.அருணா குகன், திரு.கலைச் செல்வன் பசுபதி, திரு.குலோத்துங்கன், திரு.சுந்தரம் சிதம்பரம், திருமதி இரத்தினகுமாரி சுந்தரம்,  போன்றோர் காலச் சுவடுகள் மீது கருத்துரை எழுதியோ அல்லதுவிழைவு” (LIKE) கொடுத்தோ தங்கள் கருத்தைத் தெரிவித்து வந்திருக்கின்றனர். அற்ற குளத்து அறுநீர்ப் பறவை போல், என்னை விட்டு விலகி நிற்கும் ஒருசில உறவினர்களை  இனியும் அவ்வாறே இருக்கட்டும் என்று வாழ்த்துகிறேன் !

இந்த இடத்தில், இப்போது சென்னையில் வாழ்ந்து வரும்  திரு.சுந்தரம் சிதம்பரம்  பற்றி நான் குறிப்பிட்டாக வேண்டும். தொடக்கம் முதல் இன்றைய நாள்வரை, எனது காலச்சுவடுகளைப் படித்துக் கருத்துரை சொல்லி வந்த அவரது அன்பு உள்ளம் என்னை நெகிழ வைக்கிறது ! இடையில் சில நாள் எழினி மூலமும் தன் கருத்துகளை என்னுடன் பகிர்ந்து கொண்டிருக்கிறார் !

சுவடு (01)-இல் (திரு சுந்தரத்தின்) தந்தை பற்றிய குறிப்பு வெளியாகி இருந்தது.  சுவடு (62) -இல் தனயன் (திரு.சுந்தரம்) பற்றிய குறிப்பைச் சொல்ல விரும்புகிறேன்.  திரு.சுந்தரத்தின்   தந்தை கடிநெல்வயல் இரெ.சிதம்பர தேவர் எனக்குப் பங்காளி. திரு சுந்தரத்திற்கு, திரு.கணேசன் என்ற தமையனாரும், திரு. குமரவேல் என்ற தம்பியும் உண்டு. திரு.குமரவேல் காலமாகிவிட்டார் !

இவர்களன்றி திருமதி.விஜயலட்சுமி (தென்னடார்), திருமதி.சரசுவதி (மன்னார்குடி), இன்னொரு பெண் பெயர் நினைவுக்கு வரவில்லை, ஆக மொத்தம் மூன்று பெண்பால் உடன்பிறப்புகள் உண்டு !

திரு.சுந்தரம், இளமையிலேயே தனியாளாகச் சென்னைக்கு வந்து, பல இன்னல்களை எதிர்கொண்டு, துன்பங்களால் துவண்டு சோர்ந்து விழுந்து, பிறகு மனத் தெளிவு கொண்டு, விடாமுயற்சியால் சில ஆண்டுகளுக்குப் பிறகு, அப்போதைய பல்லவன் போக்கு வரத்துக் கழகத்தில் வலவராக (DRIVER)ப் பணியில் சேர்ந்தார்.. அவர் மனைவி திருமதி இரத்தினகுமாரி (ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியை).  மூன்று பெண் மக்களுக்குப் பெற்றோரான திரு.சுந்தரமும், அவரது மனைவி திருமதி. இரத்தின குமாரியும் அன்பில் தோய்ந்த திருவுருவங்கள் !

ஒருமுறை சென்னையில் அவர் வாழ்ந்து வந்த நெசப்பாக்கம் வீட்டிற்கு நானும் என் பெண் கவிக்குயிலும் சென்றிருந்தோம். அந்த ஒரு நாளிலேயே அவர்களது அன்பின் ஆழத்தைத் தெரிந்துகொண்டோம். அவர்களது  மூன்றாவது பெண் செல்வி.காயத்திரி தேவியை  அழைத்துக் கொண்டு சரவணா ஸ்டோர்ஸ், போத்தீஸ் போன்ற துகில் மாளிகைகளுக்குச் சென்று வந்தது மறக்கமுடியாத இனிய துய்ப்பு

காலச் சுவடுகளுக்குத் தங்கள் ஆதரவைப் பெருவாரியாக  வழங்கி வந்த அத்துணை நல்ல உள்ளங்களுக்கும் இவ்வேளையில் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன், என் வாழ்க்கை வரலாற்றை உங்களுடன் பகிர்ந்து கொண்டதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி ! தொடர்ந்து படித்துக் கருத்துரை சொல்லி வந்த உங்களுக்கும் மகிழ்ச்சியாக இருந்திருக்கும் என்று நம்புகிறேன். 62 நாள் நீடித்த இந்த எழுத்தோவியம் இந்த அளவில் நிறைவு பெறுகிறது ! 

நான்கு பக்க அளவில் உங்கள் வாழ்க்கை வரலாற்றை எழுதி மின்னஞ்சல் வாயிலாக எனக்கு அனுப்பினால், அதைச் செப்பம் செய்து, தமிழ்ப் பணி மன்றத்தில் வெளியிட அணியமாக இருக்கிறேன்; அத்துடன் தமிழ்நட்பு என்னும் என்னுடைய வலைப்பூவிலும் அதை இணைத்துக் கொள்ள விரும்புகிறேன். வலைப்பூ முகவரி: www.thamizhnatpu.blogspot.com இந்த  வலைப்பூவைத் திறந்து பார்த்து அதில் வெளியாகி இருக்கும் சிலரது வாழ்க்கை வரலாறுகளைப்போல உங்கள் வாழ்க்கை வரலாற்றையும் வடிவமைத்து அனுப்பலாம் !

காலச் சுவடுகள் இந்த அளவில் நிறைவு பெறுகிறது ! இனி,  தமிழ்ப் பணி மன்றத்தில்  கட்டுரைகள் வாயிலாக என்னை நீங்கள் சந்திக்கலாம் !  அனைவருக்கும் மீண்டும் என்  நன்றி ! வணக்கம் !

------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.பி: 2051, ஆடவை (ஆனி),10]
{24-06-2020}
------------------------------------------------------------------------------------






 பொங்கல் விழா பாடல் போட்டி, 
வென்றோருக்கு வழங்கிய சான்று !




 திரு.சுந்தரம் அவர்களின் 
அண்ணன் திரு.சி.கணேசன்
 (ஓய்வு பெற்ற நடத்துநர்)




திரு.சுந்தரம் அவர்களின் தம்பி 
 (நி/வா) திரு,சி,குமரவேலு



திரு.சுந்தரம் அவர்களின் தாயார்
 (நி/வா) திருமதி வைரக்கண்ணு 
அம்மையார்

திரு.சி.சுந்தரம் 



Sunday, May 10, 2020

காலச் சுவடுகள் (61) : 2019 நிகழ்வுகள் - கூண்டுக்கிளி !


தமிழ்ப் பணி மன்ற ஆட்சியர் திரு.வை.வேதரெத்தினம் அவர்கள் எழுதும் தன்வரலாறு (AUTOBIOGRAPHY) !

காலச் சுவடுகள் (61) : 2019 நிகழ்வுகள் !

                                                    கூண்டுக் கிளி !

--------------------------------------------------------------------------------------------

அன்பு என்னும் கூண்டுக்குள் அடைபட்டிருக்கும் அத்துணை உறவுகளுமே கூண்டுக் கிளிகள் தான் ! எல்லோருடைய வாழ்விலும் எல்லா உறவுகளுமே அமைந்து விடுவதில்லை. சிலருக்கு, தந்தை முகம் இன்னதென்று அறியாப் பருவத்திலேயே தந்தை மறைந்து போயிருப்பார் !

வேறு சிலருக்குத் தாயின் முகமே தெரியாது; அண்ணன் தம்பி இல்லாத ஒற்றை ஆடவனாகச் சிலர் இருப்பார்கள்என்னைப் போல ! தமக்கை, தங்கை இல்லாத ஆடவர்களும் உண்டு.  சில உறவுகள் இல்லாத போது, இருக்கும் உறவுகள் மீது அன்பு பெருகும்; இது உலக இயற்கை !

என்னுடன் கூடப் பிறந்த தமையனோ, தம்பியோ கிடையாது; ஒரு தமக்கை, மூன்று தங்கைகள் ! அண்ணன் தம்பி இல்லாததால், தமக்கை மீதும், தங்கைகள் மீதும் எனக்கு  அன்பு  அதிகம் ! தந்தையை இளம் அகவையிலேயே இழந்துவிட்ட என் தங்கைகள் மூவருக்கும் நான் தான் திருமணம் செய்து வைத்தேன் !

என் தங்கைகளில் முதலாமவர் திருமதி கல்யாணி இராமமூர்த்தி. ஆசிரியரான திரு.இராமமூர்த்திக்கு வாழ்க்கைப்பட்டு, திருத்துறைப் பூண்டி அருகில் உள்ள இடும்பவனம் என்னும்  ஊரில் வாழ்ந்து வந்தார். மூன்று பிள்ளைகள்; ஒருவர் ஆண்; மற்ற இருவரும் பெண்கள் ! அனைவருக்கும் திருமணமாகிக் குழந்தைகளுடன் வெவ்வேறு ஊர்களில் வாழ்ந்து வருகின்றனர் !

இந்த நிலையில் 2019 -ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 13 –ஆம் நாள் திருமதி. கல்யாணி, யாரும் எதிர்பாரா நிலையில் காலமானார். அவர் இறக்கும் போது அகவை 70 இருக்கலாம்; சரியாகத் தெரியவில்லை ! இருந்தாலும் அவருக்கு இத்துணை விரைவாக இறப்பு வந்திடும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. என் அன்புக் கூண்டுக்குள் அடைபட்டிருந்த கல்யாணி என்னும் கிளி என்னைவிட்டுப் பறந்து சென்றுவிட்டது ! அதனால் ஏற்பட்ட துன்பியல் உணர்வுகளைக் காலம் தான் துடைத்து  எறிய வேண்டும்துன்பியல் நிகழ்வுகள் நிறைந்த ஆண்டாக 2019 –ஆம் ஆண்டு எனக்கு மாறிப் போயிற்று !

திருமதி.கல்யாணியின் கணவர், அத்தான் திரு.இராமமூர்த்தி அவர்கள் ஏறத்தாழ 35 ஆண்டுகளுக்கு முன்னதாக ஒரு புத்தகத்திலிருந்து பிரிந்த ஏடுகளை என்னிடம்  கொடுத்தார். மொத்தம் 99 ஏடுகள் ! புத்தகம் என்னும் கட்டுமானத்தில் இருந்து விடுவித்துக் கொண்டு உதிர்ந்து போன ஏடுகளாகத் தான் அவை இருந்தன. புத்தகத்தின் பெயர் தெரியவில்லை !

அவரது தந்தையார் அதிகம் படிக்காதவர். வேளாண்மையில் ஈடுபட்டிருந்தவர். அவர் வைத்திருந்த புத்தகம் என்று சொல்லி, அத்தான் திரு.இராமமூர்த்தி அவர்கள் 99 ஏடுகளையும் என்னிடம் ஒப்படைத்தார். அந்த ஏடுகளின் பக்கங்கள் க, , ரு, , அ போன்ற தமிழ் எண்களில்  குறிப்பிடப்பட்டிருந்தன. பக்கங்களும் வரிசையாக இல்லாமல் சில காணாமற் போயிருந்தன !

அந்த ஏடுகளின் சில பக்கங்களைப் படம் எடுத்து, சென்னையில் உள்ள திருநெல்வேலி, தென்னிந்திய சைவ சித்தாந்த நூற் பதிப்புக் கழகத்திற்கு அனுப்பிஅந்தப் புத்தகத்தின் பெயர் என்ன என்பதைத் தெரிவிக்குமாறும், அந்தப் புத்தகம் போல் புதியதொன்று கிடைக்குமா என்றும், புதிய புத்தகத்தில் விலை என்ன என்றும் கேட்டு மடல் எழுதி இருந்தேன் !

அந்தப் புத்தகத்தின் பெயர்சூடாமணி நிகண்டுஎன்றும், அஃது அப்போது இருப்பில் இல்லை என்றும் தெரிவித்து எனக்கு மறுமொழி அனுப்பி இருந்தனர் ! நான் வியப்பில் ஆழ்ந்து போனேன் ! ஐந்தாம் வகுப்புக் கூடப் படிக்காத ஒரு வேளாண் குடிமகனான திரு.கந்தசாமியிடம்சூடாமணி நிகண்டா ?“ இக்காலத்தில் பெரிய புலவர்களிடம் கூட இல்லாதசூடாமணி நிகண்டுஎன்னும்  அகரமுதலி அவரிடம் எப்படி ?

அப்புறம் தான் எனக்கு ஒன்று புரிந்தது ! பள்ளிப் படிப்பு இருந்ததோ இல்லையோ, அக்கால மக்கள் நிரம்பவும் தமிழ் நூல்களைப் படித்திருக்கிறர்கள். அதனால் தான் அவர்களால் ஆயிரக் கணக்கான நாட்டுப்புறப் பாடல்களைப் புனைய முடிந்திருக்கிறது !

காமன் பண்டிகையின் போது எரிந்த கட்சி, எரியாத கட்சி என்று இரண்டு கட்சிகளாகப் பிரிந்து காமன் வரலாற்றைப் பாடல்களாக இசை கூட்டிப் பாட முடிந்திருக்கிறது. பெண்கள் தாலாட்டுப் பாடல்களையும், கும்மி, கோலாட்டப் பாடல்களையும், ஒப்பாரிப் பாடல்களையும் புனைந்து பாட முடிந்திருக்கிறது !

பள்ளிக்குச் செல்லாதவர்கள் பாடல் புனைந்தது அக்காலம்; தமிழில் பட்டம் பெற்றவர்கள் கூட நான்கு வரியில் ஒரு பாடல் எழுத முடியாமல் திணறுவது இக்காலம் ! நாம் தமிழ்க் கல்வியில் தான், நாண் சூடற்று எத்துணைப் படுகுழியில் வீழ்ச்சி அடைந்து கிடக்கிறோம் ! தாய்மொழியில் ஒரு பாடல் எழுதத் திறனற்றவர்கள் எல்லாம் தம்மைத்தமிழன்என்று சொல்லிக் கொள்வது எள்முனையளவு கூட மாண்புடைய செயலல்லவே !

எனக்குக் கிடைத்த 99 ஏடுகளையும், மிகுந்த இன்னற்பட்டு பக்க எண் ஏறு வரிசைப் படி அடுக்கி, புத்தகமாகத் தைத்து கட்டடம் (BOUND) செய்து வைத்திருக்கிறேன். அது தான் என் தமிழ் வேட்கைக்கு உணவளிக்கும் அமுதசுரபியாக இப்போது திகழ்ந்து வருகிறது !

இப்புத்தகத்தின் இடப்பக்கம் பாடலாகவும், அதற்கு நேர் வலப்பக்கம் பாடலுக்குப்  பொருள் சொல்லும் வகையிலும்  வகைப்படுத்தித் தரப்பட்டுள்ளது. இதிலிருந்து ஒரு பாடல் மட்டும் உங்கள் பார்வைக்காக :

பரிதிபாற் கரனா தித்தன்,
..........பனிப்பகை சுடர் பதங்கன்
இருள்வலி சவிதா சூரன்
..........எல்லு மார்த்தண்டன் என்றூழ்
அருணணா  தவனே  மித்திரன்,
..........ஆயிரஞ் சோதி  யுள்ளோன்
தரணிசெங்  கதிரோன்  சண்டன்
..........தபனனே  ஒளியே  சான்றோன்
அனலியே  பரியே  பானு
..........அலரியே அண்ட யோனி
கனலியே  விகர்த்த  னன்வெங்
..........கதிரவன்  பகலோன்  வெய்யோன்
தினகரன்  பகலே   சோதி
..........திவாகரன்  அரிய  மாவே
இனனுடன்  உதயன்  ஞாயிறு
..........எல்லையே  கிரண  மாலி
விரவுமேழ்  பரியோன்  வேந்தன்
..........விரிச்சிகன் விரோச  னன்பேர்
இரவிவிண்  மணிய  ருக்கன்
..........ஏழேழும்  சூரியன்  பேர்.

வலப்பக்கம் தரப்பட்டுள்ள பாடலின் பொருள்:- பரிதி, பாற்கரன், ஆதித்தன், பனிப்பகை, சுடர், பதங்கன், இருள்வலி, சவிதா, சூரன், எல், மார்த்தாண்டன், என்றூழ், அருணன், ஆதவன், மித்திரன், ஆயிரஞ் சோதியுள்ளோன், தரணி, செங்கதிரோன், சண்டன், தபனன், ஒளி, சான்றோன், அனலி, அரி, பானு, அலரி, அண்டயோனி, கனலி, விகர்த்தனன், கதிரவன், பகலோன், வெய்யோன், தினகரன், பகல், சோதி, திவாகரன், அரியமா, இனன், உதயன், ஞாயிறு, எல்லை, கிரணமாலி, ஏழ்பரியோன், வேந்தன், விரிச்சிகன், விரோசனன், இரவி, விண்மணி, அருக்கன் ஆகிய 49 சொற்களும் சூரியனைக் குறிப்பவை !

இவற்றுள் ஏறத்தாழ 28 சொற்கள் தமிழ். ஏனைய 21 சொற்களும் வடமொழியாக இருக்கலாம். தமிழில் ஆர்வமுள்ள ஒவ்வொருவரும் தம் கையில்சூடாமணி நிகண்டுவைத்திருந்தால், அவரைவிடப் புலவர் வேறு யார் இருக்க முடியும் ?


--------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
(kadikaivedarethinam@gmail.com)
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.பி: 2051, ஆடவை (ஆனி),09]
{23-06-2020}
---------------------------------------------------------------------------------------------
திருத்துறைப் பூண்டியிலிருந்து
 16 கி.மீ  தென் மேற்கே
 உள்ள இடும்பவனம் கோயில்.

என்னிடம் உள்ள
 “சூடாமணி நிகண்டு” புத்தகம். 

கூண்டுக்கிளி

பறந்து போன பச்சைக்கிளி !

என் தங்கை 
 திருமதி.கல்யாணி : 
மறைவு: 13-10-2019.


கதிரவனைக் குறிப்பதற்குத் 
தமிழில் தான் 
எத்தனைச்  சொற்கள் !





Tuesday, May 5, 2020

காலச் சுவடுகள் (60) : 2018,19 நிகழ்வுகள் - இன்பமும் துன்பமும் !


தமிழ்ப் பணி மன்ற ஆட்சியர் திரு.வை.வேதரெத்தினம் அவர்கள் எழுதும் தன்வரலாறு (AUTOBIOGRAPHY) !

காலச் சுவடுகள் (60) : 2018,19 நிகழ்வுகள் !

 இன்பமும் துன்பமும் !

 -----------------------------------------------------------------------------------

வேலூர், திரு.மீ.இராசேந்திரன் - திருமதி கற்பகம் இணையரின் மகன் திரு.இரா.அருண்மொழித் தேவன் பொறியியல் பட்டதாரி. இந்திய மாநில அளகையின் (STATE BANK OF INDIA)) செய்யாறு கிளையில் உதவி மேலாளராகப் பணிபுரிகிறார். இவருக்கும், வேதாரணியம் வட்டம் தென்னடாரைச் சேர்ந்த அன்புத் தாமரை என்பவருக்கும் 2018 -ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 11 -ஆம் நாள் திருமணம் நடைபெற்றது !

அப்போது நான் ஓசூரில் இருந்ததால், திருமணத்திற்குச் செல்ல இயலவில்லை.  திருமணம் நிகழ்ந்து ஒரு வாரம் சென்ற பின் மணமக்கள் வேலூர் வந்தனர். அப்போது நானும் என் மனைவியும், மகள் இளவரசியும் வேலூர் சென்று மணமக்களை வாழ்த்தி மகிழ்ந்தோம் !

மாமரத்தில் காய்கள் நிரம்பக் காய்த்திருக்கின்றன. தோட்டக்காரர் கண்களில் இருந்துத் தப்பிச் சில காய்கள் இலைகளினூடே  ஒளிந்து கொண்டிருக்கின்றன. இயற்கையின் பார்வையிலிருந்து அவை எத்துணை நாள் தான் இவ்வாறு ஒளிந்து கொள்ள முடியும் ? அவற்றுள் ஒரு காய் நன்கு பழுத்துக் காணப்படுகிறது. ஒருநாள் அந்தப் பழம் காம்பிலிருந்து விடுபட்டு உதிர்ந்து விழுகிறது !

மனித வாழ்வும் அப்படித்தான் ! அகவை முதிர்வினால் என் பெரிய மாமனாரின் மகன் திரு.இரா.கணபதி 2018 ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம் 17 –ஆம் நாள் காலமானார்.  மாவட்ட நீதிபதியின் நேர்முக உதவியாளராகப் பணிபுரிந்து  ஏறத்தாழ 30 ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வுபெற்று, தஞ்சாவூர் சீனிவாசபுரம், இராசராச சோழன் நகரில் வாழ்ந்து வந்த அவர் உதிர்ந்த கனியானார் !

மரத்தின் கிளைகளில் எத்துணையோ இலைகள் தோன்றி இந்த உலகம் வாழ உயிர்வளியைத் (OXYGEN) தந்து கொண்டிருக்கிறது. நிலத்திணைகளும் (தாவரங்கள்) அவற்றின் இலைகளும் தான் மனிதனை வாழவைத்துக் கொண்டிருக்கின்றன. சில இலைகள் காற்றின் வீச்சுச் தாங்காமல் காம்பு ஒடிந்து வீழ்ந்து விடுகின்றன !

இலை முதிர்வடைந்து பழுத்துக் காம்புடன் கிளையிலிருந்து விடுபட்டு உதிர்வது இயற்கையின் நேர்வு ! ஆனால் பழுப்படையும் முன் கிளையிலிருந்து  ஒடிந்து விழுவது எதிர்பாரா நிகழ்வாகிறது. அகத்தியன் பள்ளி, பயத்தவரன் காடு திரு.மு.குமரப்பாவின் மறைவு யாரும் எதிர்பாரா நிகழ்வு. என் கடைசித் தங்கை  திருமதி. சுமதியின் கணவரான திரு.சிங்காரவேலுவின்  தம்பி அவர் ! ஆசிரியராகப் பணியாற்றி சில ஆண்டுகளுக்கு முன்பு தான் ஓய்வு பெற்றவர். 2019 –ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம், 24 –ஆம் நாள், ஒடிந்து விழுந்த இலையானார் திரு.குமரப்பா !

நமக்கு வேண்டிய ஒருவர் மறைந்து போனால் நம் உள்ளம் துன்பியல் உணர்வுகளால் துடித்துப் போகிறது. அதுபோன்றே, 2019 -ஆம் ஆண்டு, ஏப்பிரல் மாதம் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலும் சிலருக்குத் துன்பியல் உணர்வுகளையும், வேறு சிலருக்கு இன்பியல் உணர்வுகளையும் தந்துவிட்டு மறைந்து போனது ! தமிழ்நாட்டில் தனித்துப் போட்டியிட எந்தக் கட்சிக்கும் துணிவில்லை: வலுவும் இல்லை ! இத்தேர்தலில் தி.மு.., இந்தியப் பேராயக் கட்சி, .தி.மு., வி.சி.., இந்தியப் பொதுவுடைமைக் கட்சி, இந்திய மார்க்சீயப் பொதுவுடைமைக் கட்சி, கொங்கு நாடு மக்கள் கட்சி, முசுலிம் லீக், இந்திய சனநாயகக் கட்சி ஆகியவை கூட்டுச் சேர்ந்து ஒரு அணியாகப் போட்டியிட்டன !

...தி.மு., பா..., தே.மு.தி., .மா.கா,  ஆகியவைக் கூட்டுச் சேர்ந்து இன்னொரு அணியாகப் போட்டியிட்டன.  தேர்தல் முடிவுகள் இந்த அணிக்கு நற்பலன்களை அளிக்க வில்லை !

தி.மு. 20 இடங்களையும், இந்தியப் பேராயக் கட்சி புதுச்சேரி உள்பட 10 இடங்களையும், இந்தியப் பொதுவுடைமைக் கட்சி 2 இடங்களையும், இந்திய மார்க்சீயப் பொதுவுடைமைக் கட்சி 2 இடங்களையும் பெற்றன.  .தி.மு., வி.சி.., கொ.நா.., ..., மு.லீ ஆகியவை ஒவ்வொன்றும் ஒரு இடத்தில் வென்றன. வி.சி.க வேட்பாளர் ஒருவரும், ... வேட்பாளரும், கொ..க வேட்பாளரும் ம.தி.மு.க வேட்பாளரும் தி.மு.., சின்னத்தில் போட்டியிட்டு வென்றதால் தி.மு.., வின் வெற்றிக் கணக்கு 24 ஆகிறது !

...தி.மு.க பெரியகுளம் தொகுதியில் மட்டும் வெற்றி பெற்று தன் கணக்கில் வென்ற இடம்  1   என நிறுவிக் கொண்டது. தி.மு.., அணியினருக்கு இன்பியல் உணர்வையும், ...தி.மு.க அணியினருக்குத் துன்பியல் உணர்வையும் தந்தது நாடாளுமன்றத் தேர்தல். அனைத்திந்திய அளவில் பாரதிய சனதாக் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்று, அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியில் அமர்ந்தது ! திரு.நரேந்திர மோடி இரண்டாவது முறையாக இந்திய அரசின் தலைமை அமைச்சர் ஆனார் !

துன்பியல் உணர்வுகளில் துடித்துப் போன அ...தி.மு. அணியினரைப் போல் 2019 –ஆம் ஆண்டு, சூன் மாதம் 24 –ஆம் நாள் நானும் துடித்துப் போனேன் ! அன்று தான் என் மைத்துனரும் என் மனைவியின் தம்பியுமான திரு.சீவானந்தம் காலமானார். இருப்பூர்தித் துறையில், பணியாற்றி வந்த திரு.சீவானந்தம், பணியிலிருந்து ஓய்வு பெறுவதற்கு முன்பே இறந்து போனார் !

நாகப்பட்டினம் அரசினர் தொழிற்பயிற்சி  நிலையத்தில் என் முயற்சியால்  மின்னுந்து அகச்சுருள் அமைப்புப் பணியில் குறுகிய காலப் பயிற்சி பெற்றவர் திரு.சீவானந்தம். அந்தச் சான்றின் அடிப்படையில், அவரது பெரியப்பா மகன் திரு.இரா.அரங்கராசன் அவர்களின் உதவியால் இருப்பூர்தித் துறையில் பணியில் சேர்ந்தார். நல்லொழுக்கம் இல்லாத  நண்பர்களின் நட்பால், மதுப் பழக்கத்திற்கு ஆளாகி இறுதியில், திரு.சீவானந்தம் தன் உயிரையும் துறந்தார் !

ஒழுக்கம் இல்லாத நண்பர்கள் அமைந்துவிட்டால், எந்த மனிதனின் வாழ்வும் அலங்கோலம் ஆகிவிடும் என்பதற்கு திரு.சீவானந்தமே எடுத்துக் காட்டு ! மனைவி, மற்றும் மூன்று பிள்ளைகளைத் தவிக்க விட்டுவிட்டு மறைந்து போன திரு.சீவானந்தத்தின்  முடிவைப் பார்த்தாவது மது அருந்தும் நண்பர்கள் அதை விட்டொழிப்பார்களாக !

சக்கரை நோய் என்னும் நீரிழிவு (DIABETES), அரத்த உயர் அழுத்தம் (HIGH BLOOD PRESSURE), சிறுநீரகச் செயலிழப்பு (KIDNEY FAILURE) மூன்றும் ஒருதாய் வயிற்றில் பிறந்த உடன்பிறப்புகள் போன்றவை. சக்கரை நோய் இருப்பவர்கள் அதைக் கட்டுக்குள் வைக்காவிட்டால், மற்ற இரண்டும் அவரிடம் கேளாமலேயே வந்து சேரும். அதுபோல் அரத்த உயர் அழுத்தம் இருப்பவர்கள் அதை அடக்கி ஒடுக்கி வைக்காவிட்டால் ஏனைய இரண்டும் தாமாகவே வந்து அவரிடம் ஒட்டிக் கொள்ளும் !

என் மைத்துனரும் ஓய்வு பெற்ற உடற்கல்வி இயக்குநருமான திரு. மகாதேவனுக்கு எப்படியோ சக்கரை நோய் (DIABETES), வந்து அவரைத் தழுவிக் கொண்டது. சக்கரை நோயைக் கட்டுக்குள் வைப்பதில் அவர் விழிப்படையத் தவறினாரோ என்னவோ, சிறுநீரகச் செயலிழப்புக்கு (KIDNEY FAILURE) ஆளானார் !

2016 –ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம், சிறுநீரகச் செயலிழப்பு (KIDNEY FAILURE), சென்னை விசயா மருத்துவ மனையில் உறுதி செய்யப்பெற்று, அதன்பின் வாரம் ஒருமுறை, இரு முறை என அவ்வப்போதைய உடல் நிலைமைக்குத் தக்கவாறு அரத்தத் தூய்மை (DIALYSIS) செய்து கொண்டு வந்தார். உடலின் உள் உறுப்புகள் சிதைவுற்றால் எத்துணை நாள்களுக்குத்தான் மருத்துவத்தால் உயிரைப் பிடித்து நிறுத்தி வைக்க முடியும் ?

மூன்று ஆண்டுகள் உயிர்ப் போராட்டத்திற்குப் பிறகு இறுதியில் 2019 –ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 29 ஆம் நாள் அவர் தனது உயிர் மூச்சை நிறுத்திக் கொண்டார். விழிப்புக் குறைவே அவரது உயிருக்கு ஊறாக அமைந்து விட்டது. சக்கரை நோயுள்ள நண்பர்கள் மாதம் ஒருமுறை சிறு நீரில் உள்ள சக்கரை அளவையும், இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை அரத்தச் சக்கரை அளவையும் கணித்து, அவற்றைக் கட்டுக்குள் வைத்துக் கொள்ளுங்கள் என்பதே அவர்களுக்கு நான் தெரிவிக்க விழையும் செய்தி !

இரண்டு மகன்களுக்கும் திருமணம்  செய்து வைத்து விட்டு, இறந்திருந்தாலும்  கூட, அவரது இழப்பு இன்னும் பல ஆண்டுகளுக்கு அந்தக் குடும்பத்தில் துன்பியல் உணர்வுகளைத் தூவிக் கொண்டு தான் இருக்கப் போகிறது. காலம் தான் அதைத் துடைத்தெறிய வேண்டும் !

ஓய்வூதியரான திரு.மகாதேவனின் மனைவிக்குக் குடும்ப ஓய்வூதியம் பெற்றிடும் பொருட்டு உரிய விண்ணப்பங்களை நானே முழுமையாக நிறைவு செய்து தந்து விட்டு வந்தேன்.  ஆனால் இரக்க உணர்வில்லாத சில அலுவலர்கள் உருபா ஐந்தாயிரம் கையூட்டுப் பெற்றுக் கொண்ட பின்பே அதற்கு ஆவன  செய்தனர். சாவிலும் காசு பார்க்கும் இத்தகைய சண்டாளர்கள் இருக்கும் வரை, தமிழ்நாட்டில் இரக்க உணர்வு எப்படி உயிர் பிழைத்து இருக்கப் போறது ?

---------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
(kadikaivedarethinam@gmail.com)
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.பி: 2051, ஆடவை (ஆனி),08]
{22-06-2020}
---------------------------------------------------------------------------------------------

செல்வன்.அருண்மொழித் தேவன்  
செல்வி. அன்புத் தாமரை 
இணையர்.