name='description'/> கடிநெல்வயல் வை.வேதரெத்தினம் வலைப்பூ !: காலச் சுவடுகள் (45) : 2006-07 நிகழ்வுகள் - சட்டமன்றத் தேர்தல் !

காலச்சுவடுகள் ! வாழ்க்கையில் நான் கடந்து வந்த பாதை பற்றிய வரலாறு !

விரும்பும் பதிவைத் தேடுக !

Friday, April 3, 2020

காலச் சுவடுகள் (45) : 2006-07 நிகழ்வுகள் - சட்டமன்றத் தேர்தல் !



தமிழ்ப் பணி மன்ற ஆட்சியர் திரு.வை.வேதரெத்தினம் அவர்கள் எழுதும் தன்வரலாறு (AUTOBIOGRAPHY) !

காலச் சுவடுகள் : 2006-2007 நிகழ்வுகள் !

 (சுவடு.45) சட்ட மன்றத் தேர்தல் !

-----------------------------------------------------------------------------------------

தமிழ் நாட்டில் 2006 ஆண்டு மே மாதம் 8 –ஆம் நாள் சட்ட மன்றத்திற்கான பொதுத் தேர்தல் நடைபெற்றது. இதில் தி.மு.க தலைமையில் இந்தியப் பேராயக்கட்சி, பா..., இந்தியப் பொதுவுடைமைக் கட்சி, இந்திய மார்க்சீயப் பொதுவுடைமைக் கட்சி ஆகியவை  இணைந்து ஒரு அணியாகப் போட்டியிட்டன !

...தி.மு.க தலைமையில். .தி.மு.., வி.சி.க ஆகியவை இணைந்து இன்னொரு அணியாகப் போட்டியிட்டன. தேசிய முற்போக்குத் திராவிடர் கழகம் தனியாகப் போட்டியிட்டது !

தேர்தல் முடிவில் தி.மு.. 96 இடங்களும், இந்தியப் பேராயக் கட்சி 34 இடங்களும், பா..., 18 இடங்களும். இந்தியப் பொதுவுடைமைக் கட்சி 6 இடங்களும், இந்திய மார்க்சீயப் பொதுவுடைமைக் கட்சி 9 இடங்களும் பெற்ற- !

...தி.மு. 61 இடங்களிலும், .தி.மு. 6 இடங்களிலும் வி.சி. 2 இடங்களிலும் வெற்றி பெற்றிருந்தன. தனித்து நின்ற தே.மு.தி. (விசயகாந்த்) ஒரு  இடத்திலும், தற்சார்பாளர் (சுயேச்சை) ஒரு இடத்திலும் வென்றிருந்தனர்  !

இந்தியப் பேராயக் கட்சி வெளியில் இருந்து ஆதரவு அளிக்க, திரு. கருணாநிதி ஐந்தாவது முறையாக ஆட்சி அமைத்தார். அறுதிப் பெரும்பான்மை தி.மு..வுக்கு தனித்து இல்லையாயினும் கருணாநிதி தொடர்ந்து ஐந்தாண்டு காலம் ஆட்சியில் இருந்தார் !

திருச்சி படைக்கலத் தொழிலகத்தில் பணி புரிந்து ஓய்வு பெற்ற திரு.அ.சீனிவாசன் - திருமதி.ஆனந்தி இணையரின் மகள் செல்வி. கவிதாவுக்கும், வடசங்கேந்தி திரு கோவிந்தராசுத் தேவர் மகன் திரு.கண்ணனுக்கும் திருமணம் உறுதி செய்யப் பெற்றிருந்தது. இத்திருமணம் 2006 -ஆம் ஆண்டு சூலை மாதம் 13 ஆம் நாள் படைக்கலத் தொழிலகத் திருமண மண்டகத்தில் சிறப்பாக நடைபெற்றது. திருமணத்தில் நான் கலந்து கொண்டு என் இனிய வாழ்த்துகளைத் தெரிவித்து வந்தேன் !

என் இளைய மகள் இளவரசிக்கு 2006 –ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 03 –ஆம் நாள் தஞ்சாவூர் மாதா மருத்துவ மனையில் பெண் குழந்தை பிறந்தது. குழந்தையின் தந்தையான திரு.பிரபுவின் விருப்பப்படி குழந்தைக்குநேகாஎன்று பெயரிட்டோம்.குழந்தைக்கு அணிவிப்பதற்கு கைகளுக்குக் காப்பும், கழுத்துக்குச் சங்கிலியும் வாங்கினோம். அப்பொழுது ஒரு பவுன் விலை உருபா 7680 அளவுக்கு இருந்தது !

இந்த நிலையில் 2007 –ஆம் ஆண்டு  ஏப்ரல் மாதம் 20 -ஆம் நாள் என் கடைசித் தங்கை திருமதி சுமதியின் மாமனார் திரு.கே.பி.முருகையாத் தேவர் காலமானார். அவரது ஊரான பயத்தவரன் காட்டுக்கும் பிறகு கருப்பம்புலத்திற்கும்  நானும் என் மனைவியும் சென்று வந்ததாக நினைவு. இளவரசியும் குழந்தையும் தஞ்சாவூர் வீட்டில் இருந்ததால், உடனே சென்றோமா, காலம் தாழ்த்திச் சென்றோமா என்பது நினைவில்லை !

அண்ணன் திரு.மீனாட்சி சுந்தரம் அவர்களின் பெயர்த்தியும், பல்லவன் போக்குவரத்துக் கழக நடத்துநர் திரு. .இராசேந்திரன்திருமதி செந்தமிழ்ச் செல்வி இணையரின் மகளுமான செல்வி அருணாவின் திருமணம் 2007 –ஆம் ஆண்டு சனவரி மாதம் 22 –ஆம் நாள் தஞ்சாவூர் திருவோண மகாலில் நடைபெற்றது. கரந்தை திரு.தி.நவநீதம் பிள்ளைதிருமதி. இந்திரா இணையரின் மகன் திரு..குகனை செல்வி.அருணா கரம் பற்றினார் !

நான் தஞ்சாவூரில் வாழ்கையில் நடைபெற்ற திருமணம். என் மீது மிகுந்த மதிப்பும் நல்லியல்பும் கொண்டிருந்த மாப்பிள்ளை திரு.இராசேந்திரன் அவர்களின் மகள் திருமணம். நான் போகாமல் இருக்க முடியுமா ? நானும் என் மனைவியும் திருமணத்திற்குச் சென்று மணமக்களை வாழ்த்தி வந்தோம் !

எங்களுடன் அடிக்கடி உறவாடலும் ஊடலுமாக வாழ்ந்து வரும் இணைமான் (சகலை) திரு..மா.சுப்ரமணியன்திருமதி.காஞ்சனமாலா இணையர் திருத்துறைப் பூண்டியில் கட்டியிருந்த புதிய வீட்டின் புதுமனை புகுவிழா 2007 –ஆம் ஆண்டு சனவரி மாதம் 29 –ஆம் நாள் நடைபெற்றது !

இந்நிகழ்ச்சிக்கு எங்களுக்கு அழைப்பு இல்லை; எனவே நாங்களும் செல்லவில்லை. இந்த ஊடல் விரைவிலேயே முடிவுக்கு வந்து அவர்கள் எங்கள் வீட்டிற்கு வருவதும், நாங்கள் அவர்கள் வீட்டிற்குச் செல்வதும் மீண்டும் புதுப்பிக்கப் படட நிகழ்வாகிவிட்டது !

அடுத்து இன்னொரு திருமணம். என் பெரியப்பா காசிநாத தேவரின் பெயரனும், ஆசிரியர் திரு.கா.நடராசன்திருமதி.அலர்மேல்மங்கை இணையரின் இரண்டாவது மகனுமான ஆசிரியர் திரு..காசிநாதன், மன்னார்குடி வட்டம் அசேசம் என்னும் ஊரைச் சேர்ந்த  செல்வி சுதாவைக் கரம் பிடித்தார் !

2007-ஆம் ஆண்டு மே மாதம், 21 –ஆம் நாள் கருப்பம்புலம் திருமண மண்டகத்தில் நடைபெற்ற இத்திருமணத்திற்கு நானும் என் மனைவியும் சென்று வந்தோம் !

தஞ்சாவூரில் நான் வாழ்ந்து வரும் பகுதிக்கு அருகில் உள்ள இராசராசன் நகரில் உள்ள திரு.விசுவநாதன் அவர்களின் மகளைத் திரு.காசிநாதனுக்காகப் பெண் பார்த்த நிகழ்வும், திரு காசி நாதன் உள்பட அவரது பெற்றோர்களும், வேறு சிலரும் கடிநெல்வயலில் இருந்து சீருந்து மூலம் தஞ்சை வந்திருந்ததும்  நினைவுக்கு வருகிறது !

இந்த 2007 –ஆம் ஆண்டில் நிகழ்ந்த ஒரு துன்பியல் நிகழ்வு. கடிநெல்வயல் திரு..மீனாட்சிசுந்தரம், திருச்சி, நவல்பட்டு, திரு..சீனிவாசன் ஆகியோருடன் எனக்கும் தாய் மாமாவான திரு. சி.பண்டரிநாதன் அவர்கள் தமது 80 ஆம் அகவையில் 2007 ஆம் ஆண்டு ஆகத்துமாதம், 6 ஆம் நாள் காலமானார் !

தஞ்சாவூரிலிருந்து நானும் என் மனைவியும் உடனடியாகத் தேவூர் சென்று இத் துன்பியல் நிகழ்வில் கலந்து கொண்டோம். என் வாழ்க்கையில் சில வேளைகளில் தவறான முடிவுகளும் வேறு சில வேளைகளில் சரியான முடிவுகளும் எடுத்தவரும், என் தமக்கையை மணந்தவரும் என் தாய் மாமாவுமான திரு.சி.பண்டரிநாதன் மறைந்தது ஒருவகையில் எனக்குப் பெரிய இழப்பு தான் !

என் மாப்பிள்ளை திரு..சிவக்குமாரின் தம்பி திரு..இரவிக்குமார் தஞ்சாவூரில் உள்ள கமலா ஞெகிழிப் பொருள் தயாரிப்புத் தொழிலகத்தில் பணி புரிந்து வந்தார். என் கொடைத் தந்தையான (சம்பந்தி) திரு.பழனியப்பன் அவர்கள் காலமாகி விட்டதால், திரு இரவிக்குமாருக்குப் பெண் பார்க்கும் பொறுப்பு என்னை வந்து அடைந்தது !

பல இடங்களில் பெண் பார்த்த பிறகு தஞ்சை மாவட்டம் ஆடுதுறையை அடுத்த தியாகராஜபுரத்தில் திரு.முனுசாமி என்பவரின் மகள் செல்வி.இராதாவைத் தேர்வு செய்தேன். ஓசூரிலிருந்து மாப்பிள்ளை திரு.சிவக்குமார். என் மகள் திருமதி.கவிக்குயில் ஆகியோருடன் திரு.இரவிக் குமாரும் தியாகராஜபுரம் சென்று பெண்ணைப் பார்த்ததுடன், பெண்ணின் பெற்றோருடனும் பேசி முடிவு செய்தனர் !

திரு.இரவிக்குமார்செல்வி இராதா திருமணம் 2007 –ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம், 24 –ஆம் நாள் சுவாமிமலை முருகன் கோயிலில் நடைபெற்றது. முறைப்படிப் பெண் பார்த்தல், திருமண உறுதி செய்தல் (நிச்சயதார்த்தம்), திருமண நிகழ்வு அனைத்திலும் நானும் என் மனைவியும் கலந்து கொண்டோம் !

ஏதோ ஒரு பொன்னணி (நகை) வாங்குவதற்காக நண்பர் குடுபத்தினருடன் தஞ்சையில் உள்ள ஒரு நகைமாளிகைக்குச் சென்றிருந்தோம். அணிகலத் தங்கம் அன்றைய நிலையில் பவுன் விலை உருபா 7600/- என நகை மாளிகையினர் தெரிவித்தனர். 2000 –ஆம் ஆண்டு உருபா 3480 அளவில் விற்பனையான தங்கம் 2007 –ஆம் ஆண்டுஅதாவது மூன்றே ஆண்டுகளில் இரண்டு மடங்குக்கும் அதிகமாக விலை ஏற்றம் ஆகி நடுத்தட்டு மக்களை மிகவும் துன்பப் படுத்தி வருகிறது !

--------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
(kadikaivedarethinam@gmail.com)
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
தி.பி: 2051, விடை (வைகாசி),25]
{07-06-2020}
------------------------------------------------------------------------------------------
 தமிழ்நாடு சட்ட மன்றம்

திரு.இரவி - செல்வி.இராதா 
திருமணம்: நாள் : 24-10-2007

மாமா சி.பண்டரிநாதன் :
மறைவு நாள். 06-08-2007


சி.பண்டரிநாதன்









No comments:

Post a Comment