name='description'/> கடிநெல்வயல் வை.வேதரெத்தினம் வலைப்பூ !: காலச் சுவடுகள் (17) : 1971 நிகழ்வுகள் - நன்றி நயப்புரை !

காலச்சுவடுகள் ! வாழ்க்கையில் நான் கடந்து வந்த பாதை பற்றிய வரலாறு !

விரும்பும் பதிவைத் தேடுக !

Sunday, March 29, 2020

காலச் சுவடுகள் (17) : 1971 நிகழ்வுகள் - நன்றி நயப்புரை !


தமிழ்ப் பணி மன்ற ஆட்சியர் திரு.வை.வேதரெத்தினம் அவர்கள் எழுதும் தன்வரலாறு (AUTOBIOGRAPHY) !

காலச் சுவடுகள் : 1971 நிகழ்வுகள் !

                                    (சுவடு.17) நன்றி நயப்புரை !

----------------------------------------------------------------------------------------------
திருவெறும்பூர் 
அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்திற்கு 
இடமாற்றல் செய்யப் பெற்று, பணியிலிருந்து
 விடுவிக்கப் பட்டதைத் தொடர்ந்து 
01-09-1971 அன்று
 புதுக்கோட்டையில் எனக்கு அளிக்கப்பட்ட 
தேநீர் விருந்தின் போது 
நான் ஆற்றிய நன்றியுரை ! 
இப்பாடலில், 
அங்கு பணி புரிந்த 
அனைத்து அலுவலர்களின் 
பெயரும்  இடம் பெற்று இருக்கும் !
                              *************************************************
                                 அன்புநிறை   உளம்கொண்ட    
                    ..........அவைத்தலைமைக்   கெழுதகையோய்
                   அறிவுச்சுடர்    கொளுத்தும்        
                     ..........ஆசிரியப்           பெருமக்காள்
                   துன்பமெனைத்    துரத்துங்கால்       
                     .........தோள்கொடுக்கும்     நன்னண்ப !
                   தோழர்காள் !    அனைவரரையும்    
                    ...........தொழுகின்றேன்      நல்வணக்கம் !


                *************************************

திருச்சிமா    நகரம்     தனது
..........திருக்கரம்     இரண்டை   நீட்டி,
வருகஎன்    குழந்தாய்  என்று
..........வரவேற்பு      நல்க,      நீவிர்
பிரிந்திடும்   நண்பா,    நீயும்,
..........பெரும்புகழ்   பெறுக !   செல்க !
அரும்பணி   ஆற்றி    வாழ்வில்,
..........அணிபெறாய் !   என்று      கூறி,
உள்ளத்தால்   உவந்து   வாழ்த்தி,  
..........விடைதரும்   உங்கள்    பெருமை,
சொல்லிநான்  தெரிவது  இல்லை !
..........தோழர்காள் ! நன்றி !  வணக்கம் !

****************************************

சிறுமுகை   போன்ற    தோற்றம்,
..........சிந்தையில்   தெளிவு   இன்மை !
குறுகிய     உலகியல்    அறிவு,
..........குவலயம்    தெரியாத்   தன்மை !
பொறுமையாய்  நடந்தாற்  கூடப்
..........பூத்திடும்     முனிவு !   கலக்கம் !
இத்தனைத்     தகுதி      ஏந்தி,
..........இம்மனை    புகுந்த      என்னை,
பத்தரை     மாற்றுப்  பொன்போல்
..........பக்குவப்    படுத்திச்      சென்றார்,
முத்தமிழ்ச்   செல்வன்   மேனாள்
..........மேலாளர்     அரங்க     ராசன் !
தத்துவப்     பெருந்தகை   யாளன்
..........தகைமைசால் சக்கர      வர்த்தி !
மாற்றுதல்   பெற்று      நானிம்
.........மன்றத்தில்    நிற்கும்    காலை,
போற்றுதற்   குரிய      அவர்தம்
..........புகழ்தனை    நினைவு   கூரல்,
வேற்றுமைக்   குரியது   ஆகா !
..........விளம்புவன்  நன்றிநன்றி !
அனுபவப்    பள்ளி     தன்னில்
..........அடைந்தநற்  பாடம்   எல்லாம்,
பனுவலாய்  ஆக்கி    எனக்குப்
..........படைத்தபண்  பாளர்  நண்பர்,
அருள்திரு   வீரா     சாமி
..........அவருக்கும்  எந்தன்  நன்றி !
வருந்தலில்  தோயும் போது,
..........வாரிபோல்   விரைந்து  வந்து,
நல்வழி    காட்டி   என்னை,
..........நலமுடன்   வதியச்  செய்த
வல்லவர்   சைமன்     அன்பு
..........வள்ளலாம்   சீனி      வாசன்,
நல்லவர்   அழகிரி      சாமி,
...........நண்பர்கருப்  பைய     நன்றி !
கைவினைப்   பயிற்சி   ஆசான்   
..........கலைஞனாம் பழனி    யாண்டி ,
ஐயன்சுப்   பிரமணி     மற்றும்
..........அன்பர்சிவ   சிதம்பரம்பால
கிருட்டிணன் போன்றோர்க்  கும்நான்
..........கழறுவேன்   நன்றிநன்றி !
விருப்பமாய்ப்     பழகி   நெஞ்சில்,
..........விரைந்துற்ற  அழகிரி  சாமி,
அரும்பலா   நண்பர்    என்னை
..........ஆட்கொண்ட நல்மெய்  யப்பன்,
சுரும்பரை   ஒத்த    மேலோன்
..........சுந்தரம்   அவர்க்குமென்  நன்றி !
மட்டற்ற   அன்பினா     லென்
..........மனதினில்  நிறைந்து  நிற்கும்,
சுட்டவெண்  சங்கு    சுவாமி,
..........கோபால !  நன்றி !   நன்றி !
வெருனியர்  கையிற்   கொண்டு  
..........வேண்டிய பொருளின்   நீளம்,
சரிவரக்   கணிக்கும்  பண்டகக்
..........காப்பாளர்  இவரே  என்று,
அரும்புகழ்   ஆரம்    சூட்டி,
..........அகமகிழ்    வுற்ற    நண்பர்,
அருந்திறல் மறவன் நினைவில்
..........அழியாத    ஜேக்கப்     ராசு,
முத்துமுத்து   ராம    லிங்கம்,
..........முக்கனிக்  கல்யாணம்  நன்றி !
கோட்டுத்தேன்  போல உள்ளம்
..........குளிர்விக்கும் கோவிந்த  ராசு,
வாட்டத்தைப்  போக்கும்  சூசை
..........இரத்தினம்,   அரங்க   ராசன்
மூவர்க்கும்    எந்தன்    நன்றி !
..........முன்கோபம்  இருந்தா  லும்நல்
உவகையாய்  உதவிகள்  செய்து
..........உறுதுன்பம் மறக்கச்  செய்யும்
நரசிங்கன்  பேட்டைச்  செல்வம்,
..........நல்லவர்  கிருட்டிண  மூர்த்தி !
அரியலூர்   துறந்து    ஈங்கே
..........அடைந்தகாத்   தைய !  நன்றி !
இணையற்ற  பொறுமை  சாலி,
..........எந்தமிழ்  போற்றும்  செல்வன்,
மணித்திரு  ஞானம்    அறிவின்
..........மணம்திகழ்  நற்குற்   றாலம்
பாண்டியன்  நல்வழித்  தோன்றல்
..........பண்பாளர்  துரைப்பாண் டியன்நல்
நண்பராம்    கணபதி   எந்தன்
..........நலம்நாடும்   அகமது    உசேன்,
அனைவர்க்கும்   எந்தன்   நன்றி !
..........அமைதியாய்ப்  பணிகள்  ஆற்றும்
தெட்சணா    மூர்த்தி,    தாமஸ்,
..........முருகேச !   உமக்கும்  நன்றி !
கட்டளை     ஏதும்    இன்றிக்
..........கனிவுடன்    அன்பு    காட்டும்,
வித்தகன்   தமிழின்  தொண்டன்,
..........வேதையன்   அவர்க்கும்  நன்றி !
புத்தகம்   போன்று      அறிவு,
..........பொதிந்துள்ள  அரிய   மூளை,
முத்தமிழ்   ஆற்றல்     வீரன் ,
..........முக்கனித்   தேன்சுவைப்  பாகு,
எத்தனை  மொழிந்திட்   டாலும்,
..........இணையற்ற  நல்மணி   யாரம் !
உள்ளத்தைக்  கவர்ந்த   கள்வன்,
..........உறுதுணை  மணிக்கு  என்நன்றி !
வெள்ளிய   நிலவின்   துண்டு ,
...........விளங்குநல்  ஆற்றல்  அமைதி,
தெள்ளிய   உள்ளத்    தானென்
..........துணைவர்  திருஅரிக்கும்  நன்றி !
தள்ளினும்   தள்ளா    நீர்போல்
..........தழுவிடும்    சந்திர    சேகர்,
சிறப்புடன்   பணிகள்   ஆற்றி,
..........சீர்பெறும்  ஜெயச்சந்  திரன்நல்
முறுவலை   முகத்தில்   தேக்கி,
..........முரல்திருக்  கல்யாண  சுந்தரம்,
மூவர்க்கும்   நன்றி !    மற்றும்
..........முனைப்புடன் பணிகள்  ஆற்றும்
ஆவின்பால்    போன்ற     தூய
..........அன்பர்திரு  இரத்தினம்  பிள்ளை,
தாய்மையின்  நெகிழ்ச்சி  காட்டும்
..........தமிழ்மகன்    பாலு,      இராசு,
ஓய்வினை    அறியாத்    தேனீ,
..........உயர்மாரி     முத்து    நன்றி !
காய்நிலா    போல     என்றும்
..........கனிவுடன்   ஏவல்    செய்யும்
சேய்களாம்  குற்றேவ   லர்க்கும்,
..........செப்புவேன்    நன்றி !   நன்றி !
இளகிய   நெஞ்சும்    அன்பில்
..........இழைந்திடும் உணர்வும் பண்பும்
மிளிர்ந்திடும்  செயலும்  கொண்ட
..........முதல்வர்க்கும் பணிவுடன் நன்றி !

******************************************

கலங்கிய    குடும்பச்    சூழல்,
..........கால்தடு   மாறும்    வாழ்க்கை,
விலங்கிடும்  பொருளா  தாரம்,
..........விடிவெள்ளி   நோக்கும்  இல்லம்,
இத்தனை   இடர்ப்பா    டுற்று,
..........இயங்கிய   என்னை     இன்று
குத்தினார்   முதுகில்    அந்த
..........கோமகன் இயக்குநர்க்கும்  நன்றி !

******************************************

என்னையும்     மதித்து    ஈங்கு
..........இனியநல்     விருந்த     ளித்து,
பொன்னினும்  மேலாம் சொற்கள்
..........பொழிந்தனை ! என்ன சொல்வேன் !
அன்பிற்கும்   எல்லையில்    லைநும்
..........அருளுக்கும்    குறைவு    இல்லை !
மன்றத்தின்   தலைவ !   நண்ப !
..........மலரடிப்   பணிந்தேன் ! வணக்கம் !

++++++++++++++++++++++++++++++++

புதுக்கோட்டையில் பணியிலிருந்து விடுவிப்புப் பெற்ற பிறகு இரண்டு மாதங்கள் விடுப்பு எடுத்துக்கொண்டு, வேறு சிறிய நிலையத்திற்கு இடமாற்றல் பெற முயற்சி செய்யலானேன் ! என் முயற்சிகள் பயன்தரவில்லை. இறுதியில் வேறு வழியில்லாமால் 1971 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் நாள் திருவெறும்பூர் சென்று பணியேற்றுக் கொண்டேன் !
----------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.பி: 2051, மேழம் (சித்திரை),23]
{06-05-2020}
----------------------------------------------------------------------------------------------
நன்றி நவிலல் !




வேதரெத்தினம் (1971)





No comments:

Post a Comment