name='description'/> கடிநெல்வயல் வை.வேதரெத்தினம் வலைப்பூ !: காலச் சுவடுகள் (29) :1984-1985 நிகழ்வுகள் - மேலாளர் பதவி உயர்வு !

காலச்சுவடுகள் ! வாழ்க்கையில் நான் கடந்து வந்த பாதை பற்றிய வரலாறு !

விரும்பும் பதிவைத் தேடுக !

Sunday, March 29, 2020

காலச் சுவடுகள் (29) :1984-1985 நிகழ்வுகள் - மேலாளர் பதவி உயர்வு !


தமிழ்ப் பணி மன்ற ஆட்சியர் திரு.வை.வேதரெத்தினம் அவர்கள் எழுதும் தன்வரலாறு (AUTOBIOGRAPHY) !

காலச் சுவடுகள் : 1984-1985 நிகழ்வுகள் !

(சுவடு.29) மேலாளராகப் பதவி உயர்வு !

----------------------------------------------------------------------------------------------

வேலை வாய்ப்புப் பயிற்சித் துறை, பயிற்சிப் பிரிவு அமைச்சுப் பணியாளர் சங்கம் 1970 ஆம் ஆண்டுக்கு முன்னதாக உருவாக்கப்பட்டது என நினைக்கிறேன். இச்சங்கத்திற்கு அமைப்பு விதிகளை உருவாக்கி, முறையாகத் தேர்தல் நடத்தும் வரை திரு.பி.எஸ் ஜேசுதாஸ் தலைமையில் இடைக்காலப் பொறுப்புக் குழு சங்கப் பணிகளைக் கவனித்து வந்ததாக நினைவு !

சிறிது காலத்திற்குப் பிறகு சங்கத்திற்குத் தேர்தல் நடத்தப் பெற்று அதன் தலைவராக திரு.வெ.வேதாச்சலமும், பொதுச்செயலாளராக திரு. டி,வி.சீனிவாசனும்   பொருளாளராக  திரு.இரா.சீதரனும் பொறுப்பு ஏற்றிருந்தனர் !

இந்த நிலையில் 1976 ஆம் ஆண்டு திருப்பரங்குன்றத்தில் நடைபெற்றப் பொதுக்குழுவில் சென்னை, திருச்சி, கோவை, மதுரை, நெல்லை ஆகிய ஐந்து மண்டலங்கள் உருவாக்கப்பெற்று, மண்டலத் துணைத் தலைவர் என்னும் பதவிகள் உருவாக்கப்பட வேண்டும் என்று நான் கொண்டு வந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, சங்க விதிகளில் தக்கபடி திருத்தம் செய்யப்பட்டது !

அடுத்து 1978 ஆம் ஆண்டு நடைபெற்ற  சங்கப் பொறுப்பாளர்கள் தேர்தலில், திருச்சி மண்டலத் துணைத் தலைவர் பொறுப்புக்கு நான் தேர்வு செய்யப்பட்டேன். நான் பொறுப்பில் இருந்த மூன்றாண்டு காலத்தில் சில செயல் திட்டங்களை வகுத்துக் கொடுத்து, ஒருசில கோரிக்கைகள் நிறைவேற்றத்திற்குப் பின்புலமாகச் செயல்பட்டு வந்தேன் !

மூன்றாண்டுகளுக்குப் பிறகு 1981 ஆம் ஆண்டு நடைபெற்ற பொறுப்பாளர்கள் தேர்தலில் சங்கத்தின் அடுத்த தலைவராக திரு.சு.செல்லையாவும் பொதுச் செயலாளராக திரு.எம்.பால்ராசும், பொருளாளராக திரு.ஆர்.நடராசனும் தேர்வு செய்யப்பட்டனர் !

இந்த அணி தேர்வு செய்யப்படுவதில் என் பங்கு முதன்மையாக இருந்தது. புதிய ஆட்சியாளர்கள் பொறுப்புக்கு வந்த பின்பு அவர்களது அறிவார்ந்த அணுகுமுறையின் காரணமாக பலருக்குப் பதவி உயர்வு வாய்ப்பு நெருங்கி வந்தது !

பதினெட்டு ஆண்டுகளாகப் பண்டகக் காப்பாளராகப் பணிபுரிந்து வந்த எனக்கும் இந்த ஆண்டு (1984) அலுவலக மேளாளராகப் பதவி உயர்வு வாய்ப்பு எதிர்பார்க்கப் பட்டது !

எதிர்பார்த்தது போலவே 1984 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அலுவலக மேளாளராகப் பதவி உயர்வு அளித்து தாராபுரம் தொழிற்பயிற்சி நிலையத்தில் நான் பணியமர்த்தம் செய்யப்பட்டேன் !

சேலத்தில் கூடுதல் பண்டகக் காப்பாளர் (கருவிகள் பண்டகம்) திரு..முத்துச்சாமியிடம் என் பொறுப்புகளை ஒப்படைத்துவிட்டு 1984 ஆம் ஆண்டு மே மாதம் 2 ஆம் நாள் பண்டகக் காப்பாளர் பணியினின்று விடுவிப்புப் பெற்றேன். பணியேற்பு இடைக்காலத்திற்குப்  பிறகு 11-05-1984 அன்று தாராபுரத்தில் அலுவலக மேளாளராக என் பணி தொடங்கியது !

தாராபுரத்தில் நான் பணியேற்கையில் திரு.டி.கே.விசுவநாதன் முதல்வராக இருந்தார்.  அலுவலக மேளாளர் பணியிடம் வெட்புலமாக இருந்தது. வெட்புலப் பணியிடத்தில் நான் பணியமர்த்தம் செய்யப்பட்டிருந்தேன் !

திரு. பி.சுப்ரமணியன் கணக்கராக இருந்தார். இவர்களன்றி திரு.சீதாராமன் என்பவர் உதவியாளர். பிற அலுவலர்களின் பெயர்கள் இப்போது நினைவில் இல்லை .திரு. சீதாராமன் மூலம் ஒரு அறை ஏற்பாடு செய்து கொண்டு அதில் தங்கினேன் !

கோடைக்காலத்தில்  தாராபுரத்தில் காற்று மிக வலுவாக வீசும். பயிற்சி நிலையம் அப்போது ஊருக்கு வெளியில், ஈரோடு நெடுஞ்சாலையில் இருந்தது. தாராபுரம் நகரிலிருந்து பயிற்சி நிலையத்திற்கு ஈருருளியில் (BI-CYCLE) வருவதென்பது மலைச் சாலையில்  45 பாகைக் கோணத்தில் ஏறுவதைப் போன்றது !

சமதளச் சாலை தான். ஆனால் வலுவாக வீசும் எதிர்காற்றில் காற்றை எதிர்த்து ஈருருளியை இயக்குவது கடினமாக இருக்கும். அப்போது பேடுருளி (MOPED) அவ்வளவாகப் புழக்கத்தில் இல்லாத காலம் ! 

பெரும்பாலான அலுவலர்கள் ஈருருளிதான் வைத்திருப்பார்கள். நான் மட்டும் திரு.சீதாராமனின், உந்துருளியில் (MOTOR CYCLE) அவருடன் அலுவலகத்திற்குச் சென்று வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தேன் !

பணியில் சேர்ந்த ஒரு வாரத்திற்குள், கணக்கர் திரு.சுப்ரமணீயனுடன் பழனிக்குச் சென்று வந்தது நினைவு இருக்கிறது.  தாராபுரம் பழனி இடையே 36 கி.மீ. தொலைவு தான் ! 

தாராபுரத்தில் இன்னொரு சிறப்பு, அங்கு உடலொட்டி (பனியன்) விலை மிக மலிவு. அதுபோல் வெண்ணெய் விலையும் மிக மலிவு. இது 1984 வாக்கில் இருந்த நிலைமை. இப்போது எப்படி இருக்கிறது என்று எனக்குத் தெரியாது !

தாராபுரம் .சுந்தர்ராசன் என்று ஒரு திரைப்படப் பாடகர் இருந்தார். ”அழகு ரதம் பிறக்கும்; அது அசைஞ்சு அசைஞ்சு நடக்கும்என்ற அவரது பாடல் அக்காலத்தில்  பரவலாக எல்லா மக்களாலும் விரும்பிச் சுவைக்கப்பட்ட பாடல் ! 

நண்பர் திரு.சீதாராமன், ஒருநாள்  தாராபுரம் .சுந்தர்ராசன் வீட்டுக்கு என்னை அழைத்துச் சென்று அறிமுகப்படுத்தி வைத்தார். அங்கேயே  ஒரு தெருவைக் காண்பித்து இது தான் நடிகர் நாகேஷின் சொந்த வீடு இருக்கும் தெரு என்றும் காண்பித்தார் !

இருபத்தைந்து நாள்கள் கடந்தன. ஒரு நாள் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. கடுமையான குளிர்க்காய்ச்சல். நண்பர் திரு. சீதாராமனின் அருமையான கவனிப்பில் சற்றுக் காயல் குறைந்தது. ஊருக்குச் சென்று உடல்நலம் சீரானபின் பணிக்குத் திரும்பலாம் என்று முடிவு செய்து, 30 நாள் விடுப்பில் சேலம் சென்றுவிட்டேன் !

நாகப்பட்டினத்தில் அலுவலக மேலாளராகப் பணி புரிந்து வந்த திரு. முகமது கனி யூசூப் ஆட்சி அலுவலராகப் பதவி உயர்வு பெற்று சேலம் வந்து பணியேற்றுக் கொண்ட செய்தி நான் விடுப்பில் இருக்கையில் எனக்குத் தெரியவந்தது !  

உடனடியாகச் சென்னைக்குச் சென்று சங்கத் தலைவர் திரு.செல்லையாவையும் அழைத்துக் கொண்டு போய் இணை இயக்குநர் திரு.வி.யு.புருதோத்தமனைச் சந்தித்தேன் !

எனது பணித் திறமையால் கவரப் பெற்றிருந்த இணை இயக்குநர், எப்பொழுதும் என்பால் நன்மதிப்பு வைத்திருப்பவர். நாகப்பட்டினத்தில் அலுவலக மேலாளர் பதவி வெட்புலமாக இருப்பதைச் சொல்லி, அந்த இடத்திற்கு எனக்கு  இடமாற்றல் தரும்படிக் கேட்டுக் கொண்டேன் ! 

அவர் இயக்குநரைச் சந்தித்துப் பேசி அன்றே எனக்கு தாராபுரத்திலிருந்து நாகப்பட்டினத்திற்கு இடமாற்றல் ஆணையை வழங்கச் செய்தார் !

1984 மே மாதம் 11 ஆம் நாள் தாராபுரத்தில் அலுவலக மேலாளராகப் பணியேற்ற நான், 55 நாள்கள் கழித்து சூலை மாதம் 4 ஆம் நாள் அங்கிருந்து விடைபெற்றேன் !

நாகப்பட்டினத்தில் நீலா வடக்கு வீதியில் 47 ஆம் இலக்கமுள்ள வீட்டை 11-07-1984 முதல் வாடகைக்கு அமர்த்திக் கொண்டு வீட்டு உடைமைகளையும் தாராபுரத்திலிருந்து சுமையுந்து மூலம் கொணர்ந்து வீட்டில் இறக்கி விட்டு சூலை மாதம் 12 ஆம் நாள் பணியில் சேர்ந்துவிட்டேன் !

நாகப்பட்டினத்தில் வீடு பார்ப்பதற்கும், வீட்டு உடைமைகளைக் கொணர்ந்து இறக்கி வைப்பதற்கும் திரு.என்.கலியபெருமாள் என்னும் மின் இணைப்பியல் பிரிவு ஆசிரியர் மிகவும் உதவியாக இருந்தார் !

நாகப்பட்டினத்தில் முன்பு நான் பணிபுரிந்திருக்கிறேன், என்பதால், திரு.கலியபெருமாள் எனக்கு முன்பே பழக்கமானவர் தான். நான் இங்கு பணியேற்ற போது திரு.ஆர்.ஜேக்கப் என்பவர் இன்னொரு மேலாளர். திரு.இராசு உடையார் முதல்வராக இருந்தார் !

அலுவலகத்தில் திரு.என்.ஜானகிராமன், திரு.இலட்சுமணன், இருவரும் புதுமுகங்கள் திரு.இராசாமணி, திரு.பி.ஆர்.பாலகிருட்டிணன் போன்றோர் பழைய முகங்கள் !

நால்வரும் உதவியாளர் நிலை அலுவலர்கள். திரு.இராம்தாசு என்பவர் பண்டகக் காப்பாளர். திரு. கல்விக்கரசு, திரு.பக்கிரி, போன்றோர் அலுவலக உதவியாளர்களாகப் பணியாற்றிய புதுமுகங்கள் !


இந்தியத் தலைமை அமைச்சர் இந்திராகாந்தி 31-10-1984 அன்றுஅவரது பாதுகாவலர்களால் சுடப்பட்டு இறந்ததைத்  தொடர்ந்து  இராசீவ் காந்தி  தலைமை அமைச்சராகப் பொறுப்பு  ஏற்றிருந்தார்நாடாளுமன்றத்திற்குப் பொதுத் தேர்தலையும் அறிவித்தார் !

இதன் விளைவாக 1984 ஆம் ஆண்டு திசம்பர் மாதம் தமிழ்நாடு சட்ட மன்றத்திற்கும் நாடாளு மன்றத்திற்கும் ஒரே நேரத்தில் இணைந்து பொதுத் தேர்தல் நடைபெற்றது !

அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்  கழகமும்இந்தியப் பேராயக் கட்சியும் (CONGRESS) கூட்டணி சேர்ந்துப் போட்டியிட்டனசட்டமன்றத் தேர்தலில் அ...தி.முக 132 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது !

...தி.மு..வின் கூட்டணிக் கட்சியான இந்தியப் பேராயக் கட்சி 61 இடங்களில் வென்றதுதி.மு..வுக்கு 24 இடங்களே கிடைத்தனபிற கட்சிகள் 17 இடங்களைப் பெற்றிருந்தன.கோ.இராதமிழ்நாட்டின் முதலமைச்சராக 3 ஆவது முறையாகப் பொறுப்பேற்றுக் கொண்டார் !

முன்னதாக ம.கோ.இரா. (M.G.R.) முதல் முறை 30-06-1977 முதல் 17-02-1980 வரையிலும்இரண்டாவது முறை 09-06-1980 முதல் 15-11-1984 வரையிலும்ஆக மொத்தம் 7 ஆண்டுகள், 24 நாள்கள் முதமைச்சராகப் பதவி வகித்திருக்கிறார் !

நாடாளுமன்றத் தேர்தலில் அ...தி.மு. 12 இடங்களையும் அதன் கூட்டணிக் கட்சியான இந்தியப் பேராயக் கட்சி (CONGRESS)  25 இடங்களையும்வென்றனதி.மு.. 2 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றிருந்தது !


அனைத்திந்திய அளவில் இந்தியப் பேராயக் கட்சி பெரும்பானமை பெற்றுஇராசீவ் காந்தி இந்தியத் தலைமை அமைச்சராக மீண்டும் பொறுப்பேற்றுக் கொண்டார் !

1985 –ஆம் ஆண்டு சனவரி மாதம் 28-ஆம் நாள் முதல் பயிற்சி நிலைய அலுவலர்கள் குடியிருப்பில் உள்ள அலுவலக மேலாளர் குடியிருப்புக்கு மாறிக்கொண்டேன் ! குடியிருப்புக் கட்டடத்தின் வெளியே நிரம்ப இடம் வெட்புலமாகக் கிடந்தது. வெட்புல இடத்தின் ஒரு பகுதியை வேலியிட்டு அடைத்துத் தோட்டம் அமைத்திருந்தேன் !

தோட்டத்தில் வாழைக் கன்றுகள்  மூன்று இடங்களில் வைத்திருந்தேன். எஞ்சிய இடங்களில் மிளகாய், கத்தரி, தக்காளி, வெண்டை  ஆகியவை பயிராக்கி இருந்தேன். இளமைக் காலத்தில் எனக்கு  வேளாண்மையில் பயிற்சி இருந்ததால், தோட்டப் பயிர்களை நட்டுப் பேணுவதில் இன்னல் எதையும் நான் எதிர்கொள்ளவில்லை. எட்டு அகவையான என் மகன் இளம்பரிதிக்கும் தோட்டத்துச் செடிகளுக்கு நீர் பாய்ச்சுவதிலும், அவற்றைப் பேணுவதிலும் மிகுந்த ஈடுபாடு உருவாயிற்று. 

கற்பூரவல்லி, மொந்தன், பூவன் ஆகிய வாழைகள் அடிக்கடி  தார் போட்டு வந்தன. . முற்றிய தார்களை வெட்டி எடுத்துச் சென்று, நாகூரில் மூட்டம் போட்டு எடுத்து வருவார் தங்கவேலு என்னும் காவலர்.  அக்கம்பக்கத்துக் குடியிருப்புகளில் இருந்தோர் அனைவருக்கும் வாழைப் பழங்கள் தந்து நாங்களும் உண்போம் !

இயற்கையுடன்  ஒன்றியைந்த  இந்த வாழ்க்கை முறை என் பிள்ளைகளுக்கு மிகவும் பிடித்திருந்தது. மகன் மகள் இருவரும் நாகூரில் உள்ள பள்ளிகளில் சேர்த்திருந்தேன். நிழல்மரங்கள் நிறைந்த பள்ளியின் சூழ்நிலை அவர்கள் மகிழ்ச்சியாகப் பள்ளிக்குச் சென்றுவர உதவியது !

என் மகன், மகள் இருவரையும் ஈருருளியில் அழைத்துச் சென்று பள்ளியில் விட்டுவருதல், திரும்ப அழைத்து வருதல் ஆகிய பணிகளை திரு.கல்விக்கரசு தானே விரும்பி ஏற்றுக் கொண்டார்

பழகுதற்கு மிக இனியவரான திரு.கல்விக்கரசு இந்தப்பணியை என்னை வற்புறுத்தி ஏற்றுக் கொண்டு பொறுப்புடன் செய்து வந்தமை இன்றும் கூட என்னை நெகிழச் செய்கிறது. 35 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது. அவரும் சில பதவி உயர்வுகளைப் பெற்று இப்போது ஓய்வு பெற்றிருக்கக் கூடும் ! 

அவரை மீண்டும் சந்திக்கும் வாய்ப்புக் கிட்டாதா என்று என் மனதில் ஒரு ஓரத்தில் இப்பொழுதும் சிறு ஏக்கம் இருந்து கொண்டுதான் இருக்கிறது. காலம் ஒடி மறையலாம்; சில நினைவுகள் மறைவதில்லையே !
                       
-----------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
(kadikaivedarethinam@gmail.com)
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
தி.பி: 2051, விடை (வைகாசி),05]
{18-05-2020}
----------------------------------------------------------------------------------------------
தாராபுரம் 
அரசினர் தொழிற் பயிற்சி நிலையம்.


தாராபுரம் நகரம்


அமராவதி ஆறு, தாராபுரம்.

நாகப்பட்டினம்

நாகப்பட்டினம் 
தொழிற்பயிற்சி நிலைய அலுவலர் 
குடியிருப்பில்
 நான் போட்ட தோட்டம்

தாராபுரத்தில் 
காற்று பலமாக வீசும்;  ஈருருளியில் 
எதிர்காற்றில் செல்வது
மலைச் சாலையில் செல்வது போலக்
 கடினமான பயணமாக இருக்கும்.

 நாகப்பட்டினம் 
தொழிற் பயிற்சி நிலைய 
அலுவலர் குடியிருப்பில்
 நான் போட்டிருந்த தோட்டத்தில்  
விளைந்த வாழைத் தார்கள்










No comments:

Post a Comment